ஒருநாள் கிரிக்கெட்டில் போட்டியில் இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது. இதில், 107 ரன்கள் வித்தியாசத்தில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதில், இந்தியா சார்பில் புதிய வரலாறு எழுதப்பட்டது.

நேற்றைய போட்டியில் கேப்டன் கோலியை தவிற, இந்தியா சார்பில் களமிறங்கிய அனைத்து வீரர்களும், அதிரடியாக விளையாடி அட்டகாசப்படுத்தினர்.

அதன்படி, கே.எல்.ராகுல் 102 ரன்களும், ரோஹித் சர்மா 159 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். இதன் மூலம், இந்த ஒரு ஆண்டில் மட்டும் ரோஹித் சர்மா, 7 சதம் அடித்து அசத்தினர். அதேபோல், ரோஹித் சர்மாவிற்கு ஒருநாள் போட்டியில் இது 28 வது சதமாகும். கே.எல்.ராகுலுக்கு இது 3 வது சதமாகும்.

பின்னர், விராட் கோலி டக் அவுட் ஆனதைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பந்த் ஜோடி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துகளை 'சும்மா கிழி'த்தெரிந்தனர்.

அதாவது 45 வது ஓவர்கள் வரை இந்திய அணி, 3 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனையடுத்து, கடைசி 5 ஓவர்களில் மட்டும் மொத்தம் 79 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதில், வெறும் 2 ஓவர்களில் 55 ரன்கள் அதிரடியாகக் குவிக்கப்பட்டது.

47 வது ஓவரை எதிர்கொண்டபோது, முதல் பந்து நோ பால் ஆனது. அதில் ஒரு ரன் ஓடி எடுக்கப்பட்டது. மீண்டும் வீசப்பட்ட முதல் பாலில் ரிஷப் பந்த், ஒரு ரன் மட்டுமே சேர்த்தார்.

இதனையடுத்து, ஸ்ரேயாஸ் ஐயர் எதிர்கொண்ட மற்ற பால்கள் எல்லாம் 'சும்மா கிழி'த்தெரியப்பட்டது. ஸ்ரேயாஸ் ஐயர் எதிர்கொண்ட 5 பாலில் 4 பால்கள் சிக்ஸர்களாக பறந்தன. ஒரு பால் மட்டும் பவுண்டரியாக மாறியது. ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் இந்த ஒரு ஓவரில் 29 ரன்கள் சேர்த்தார். முதல் பந்தில் நோ பால் எல்லாம் சேர்த்து 2 ரன்கள் என, இந்த ஓவரில் மொத்தம் 31 ரன்கள் சேர்ந்தது. இதுவே, ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், ஒரு ஓவரில் அதிகபட்சமாக அடிக்கப்பட்ட ரன்னாகும்.

இதற்கு முன்னதாக இந்தியா சார்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு, சச்சின் - அஜய் ஜடேஜா ஜோடி, ஒரு ஓவரில் 28 ரன்களை சேர்த்திருந்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. தற்போது, 2019 ஆம் ஆண்டில், ஸ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பந்த் ஜோடி அதனை முறியடித்துள்ளது.

இதனால், ஸ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பந்த் ஜோடிக்கு கிரிக்கெட் வட்டாரத்தில் வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.