தமிழகத்தில் மதவழிபாட்டுத் தலங்களைத் திறந்தால் என்ன நடக்கும் என்று, தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் 4 வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு பணிகளுக்குத் தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, திருச்சி, தஞ்சை உட்படத் தமிழகம் முழுவதும் 25 மாவட்டங்களில், மாவட்ட அளவில் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. அத்துடன், தமிழக முழுவதும் இன்று முதல் அரசு அலுவலர்கள் பணிக்குத் திரும்பி உள்ளதால், சென்னையில் இன்று முதல் 200 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் இன்னும் மிழியாகக் கட்டுப்படுத்தப்படாமல் இருப்பதால், தமிழகத்தில் மதவழிபாட்டுத் தலங்களைத் திறந்தால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாது என்றும், இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றும், தமிழக அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது. இதனால், மதவழிப்பாட்டு தலங்கள் மற்றும் மால்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும், தமிழக அரசு கூறியுள்ளது.

மேலும், தமிழகத்தில் மதவழிபாட்டுத் தலங்களைத் திறக்கக்கோரிய மனுவைத் தள்ளுபடி செய்தது, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, தமிழகம் முழுவதும் உள்ள வழிபாட்டுத்தலங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க போதுமான காவலர்கள் இல்லை என்று, தமிழக அரசு பதில் அளித்ததை அடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் அந்த மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.

குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் நாளை முதல் சலூன் கடைகளைத் திறக்கலாம் என்று முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முடிதிருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையைப் பரிசீலித்து, இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதேபோல், சென்னையில் சலூன் கடைகளைத் திறக்க அனுமதியில்லை என்றும், முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சென்னை, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் முடிதிருத்தகம் கடைகளைத் திறக்கக்கூடாது என்றும், தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.

இதனிடையே, சி.பி.எஸ்.இ. 12 ஆம் வகுப்புத் தேர்வு ஜூலை ஒன்றாம் தேதி முதல், 15 ஆம் தேதி வரை நடைபெறும் என்று, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.