சுனிலுக்கு அதிமுக வலை வீசியுள்ள நிலையில், திமுக அதிர்ச்சியில் உரைந்துபோய் உள்ளது.

டிஜிட்டல் உலகில் அரசுத் துறைகள் மட்டுமல்ல, அரசியலும் தற்போது தனியார் மயமாகிவிட்டது. 

கடந்த 2 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, நரேந்திர மோடியை, பிரதமர் ஆக்குவதற்காக சுமார் 100 பேர் வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டு, அவருக்குப் பின்னாலிருந்து பணியாற்றியதாகக் கூறப்படுவதுண்டு. அதன்படி அவர்களது பணி என்னவென்றால், மோடி எப்போது, எந்த நேரத்தில், எந்த இடத்தில் பிரச்சாரம் செய்ய வேண்டும், அந்த மேடையில் அவர் என்ன பேச வேண்டும், எந்த உடை அணிய வேண்டும், அவரது டிவிட்டரில் எந்த கருத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்பது தான் அடிப்படையான பணிகள். 

இந்த ஃபார்முலாவை பின்பற்றித்தான், மோடி பிரதமர் ஆனார் என்று அரசியல் வட்டாரத்தில் அதிகம் பேசப்படுவதுண்டு. அதேபோல், இதுபோன்ற பார்முலாவை பல்வேறு அரசியல் கட்சிகளும் பின்பற்றி வருவதாகக் கூறப்படுவது.

அந்த வகையில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் திமுகவின் அரசியல் செயல்பாடுகள் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அன்றாட செயல்பாடுகளை வடிவமைத்து, செயல்படுத்தி வந்தது ஓ.எம்.ஜி. என்கிற தனியார் நிறுவனம் தான். அந்த நிறுவனத்தில் தலைவர் தான் இந்த சுனில்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த சுனில், இந்திய அளவில் மிகப் பெரிய ஆளுமைகளாக உள்ள பிரதமர் மோடி, நிதிஷ்குமார், ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரின் அரசியல் செயல்பாடுகளை வடிவமைக்கும் ஐபேக் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் பிரசாந்த் கிஷோரின் டீமில் முக்கிய பொறுப்பிலிருந்தவர். 

இந்நிலையில், கடந்த 5 வருடங்களாக திமுகவின் முக்கிய நிகழ்வுகளில் அங்கம் வகித்த வந்த சுனில், கடந்த சில நாட்களாக திமுகவுடனான தனது ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டாக தகவல்கள் வெளியானது. இதற்கு மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் தலையீடு அதிக அளவிலிருந்ததே, காரணம் என்றும் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திமுக பணிகளிலிருந்து வெளியேறிய சுனிலை, தங்கள் பக்கம் இழுக்க அதிமுக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. 

குறிப்பாக, திமுகவின் பிளஸ் மற்றும் மைனஸ்களை தெரிந்தவர் என்பதால், வரும் சட்டமன்றத் தேர்தலில் எளிதில் வெற்றிபெற சுனில் உதவியாக இருப்பார் என்றும் அதிமுக திட்டமிட்டுள்ளது. இதற்காக, உளவுத்துறை அதிகாரிகள் மூலம் சுனிலுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இதனால், திமுக என்ன செய்வது என்று தெரியாமல் கடும் அதிர்ச்சியிலிருந்து வருவகது.