காதல் என்ற பெயரில் சிறுமியைக் கேரளாவிற்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்த காதலன் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் 17 வயது மகள் ஒருவர், கோவை கணியூரில் உள்ள பஞ்சாலையில் பணியாற்றி வந்துள்ளார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ராய்மோன் என்ற இளைஞர், அடிக்கடி சிறுமியைப் பார்க்க அங்கு வந்து சென்றுள்ளார். வரும்போதெல்லாம், சிறுமியிடம் ஆசைவார்த்தைகள் கூறி, காதல் என்ற பெயரில் அவரை கவர்ந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, சிறுமியிடம் ஆசைவார்த்தைகள் கூறி, கேரளாவிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, சிறுமியைப் பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, மகளைக் காணவில்லை என்று தேடிய சிறுமியின் பெற்றோர்கள், வேலை செய்யும் இடத்தில் விசாரித்துள்ளனர். அப்போது, ராய்மோன் தன் மகளைக் கேரளாவிற்கு அழைத்துச் சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் அருகில் உள்ள கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், ராய்மோன் செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது, அந்த நம்பர், கேரளாவிலிருந்து கோவைக்கு வந்துகொண்டிருப்பது தெரியவந்தது.

பின்னர், போலீசார் ரயில் நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது, இருவரும் வந்து இறங்கினர். இதனையடுத்து, ராய்மோனை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். மேலும், அந்த பெண்ணிற்கு 17 வயது தான் ஆகிறது என்பதை உறுதி செய்த போலீசார், சிறுமியைப் பலாத்காரம் செய்த குற்றத்திற்காகக் கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.