சென்னை சரவணா ஸ்டோர் நகைக்கடையில் ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய 10 பேர் கொண்ட கும்பல் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.

சென்னை தி.நகர் சரவணா ஸ்டோர்ஸ் நகைக்கடையில், கடந்த 3 ஆம் தேதி, திருவேற்காடு சுந்தரா சோழபுரம் பகுதியைச் சேர்ந்த தனசேகரன், 3 சவரன் செயின் வாங்கி உள்ளார். அந்த நகையில், மாவு போன்ற பொருள் தடவித் தந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, சுமார் ஒரு மணி நேரம் கழித்து அந்த கடைக்கு மீண்டும் வந்த தனசேகரன், கடையின் மேனஜரை வரச்சொல்லி, இது போலியான நகை என்றும், தான் பத்திரிகை ஆசிரியர் என்றும் கூறி மிரட்டியிருக்கிறார். மேலும், 15 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய அவர், பணம் தர மறுத்தால் உங்கள் நிறுவனத்தைப் பற்றி எல்லா பத்திரிகையிலும் செய்தி வரும்படி செய்துவிடுவேன் என்று மிரட்டி உள்ளார்.

இதனால், பயந்துபோன நிருவாகம், அவர் கேட்டபடி 15 லட்சம் ரூபாயை உடனடியாக கொடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் நிகழ்ந்து 10 நாட்கள் கடந்த நிலையில், மீண்டும் 15 பேருடன் வந்த தனசேகர், மீண்டும் ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டி உள்ளார். இல்லையென்றால், பத்திரிகையில் செய்தி வெளியிட்டு, அசிங்கப்படுத்திவிடுவேன் என்றும் மிரட்டி உள்ளார்.

கடை மேனஜரும், பணம் தருவதாகக் கூறிவிட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, போலீசார் விரைந்து வந்துள்ளனர். அப்போது, போலீசாரைப் பார்த்த பயத்தில் அங்கிருந்து 5 பேர் தப்பி ஓடியுள்ளனர். மற்ற 10 பேரையும் போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பிடிபட்டவர்களில் 5 பேர் வழக்கறிஞர்கள் என்பது தெரியவந்தது.

பின்னர், கைது செய்யப்பட்ட தனசேகரிடமிருந்து போலியான பத்திரிகையாளர் அடையாள அட்டை, அவர்கள் கொண்டு வந்த கத்தி, துப்பாக்கி மற்றும் அவர்கள் பயன்படுத்தி கார்களையும் போலீசார் பறிமுதல் செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே,சரவணாஸ்டோர்ஸ்நிர்வாகம் முதலில்மிரட்டியதும், ஏன் 15 லட்சம் ரூபாய்பணத்தைத்தர வேண்டும் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. இதனால்,சரவணாஸ்டோர்ஸ்மீதான நம்பகத் தன்மை குறித்து, தற்போது புதியசர்ச்சைஎழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.