கள்ளக் காதலியிடம் அவளது 14 வயது மகளைக் கேட்ட கள்ளக் காதலனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த 28 வயதான ஷேக் முகமது, அங்குள்ள அண்ணனூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் கோழிக்கறி கடை நடத்தி வந்தார்.



இந்நிலையில், இதே பகுதியில் வசித்து வரும் 35 வயதான ஜெயலட்சுமி, அடிக்கடி ஷேக் முகமது கடையில் வந்து கோழிக்கறி வாங்குவது வழக்கம். அப்போது,
இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டு, அது தகாத உறவாக மாறி உள்ளது.

இதனையடுத்து, ஜெயலட்சுமியும் - ஷேக் முகம்மதுவும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், ஜெயலட்சுமி வீட்டிற்கு ஷேக் முகமது அடிக்கடி வந்து செல்வதால், ஜெயலட்சுமியின் 14 வயது மகள் மீது, ஷேக் முகம்மதுவுக்கு ஒரு கண் இருந்துள்ளது.

இதனையடுத்து, ஜெயலட்சுமி இல்லாத நேரம் பார்த்து, அவரது வீட்டிற்கு வந்த ஷேக், வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்து, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

பின்னர், ஜெயலட்சுமி வீடு திரும்பியதும், சிறுமி நடந்ததை எல்லாம் கூறி அழுதுள்ளார். இது குறித்து, ஷேக் முகமதுவை, சிறுமியின் தாயார் கடுமையாகக் கண்டித்துள்ளார். அப்போது, ஜெயலட்சுமி மற்றும் அவரது மகள் காலில் விழுந்த ஷேக் முகமது மன்னிப்பு கேட்டுள்ளார்.

பின்னர், இவர்களின் தகாத உறவு மீண்டும் தொடர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, சில நாட்கள் அமைதியாக இருந்த ஷேக் முகமது, ஜெயலட்சுமியிடம் அவரது மகளை தனக்குத் திருமணம் செய்து தரும்படி கேட்டு தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

இதனால், இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. ஒரு கட்டத்தில் கடும் ஆத்திரமடைந்த அவர், ஜெயலட்சுமியை கடுமையாகத் தாக்கி துன்புறுத்தி உள்ளார்.

இதனால், பயந்துபோன ஜெயலட்சுமி, அங்குள்ள ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், ஷேக்முகமதுவை கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.