பட்டாக் கத்தியால் மாணவர்கள் வெட்டிக்கொண்டு சண்டை போட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பல்லாவரத்தில் செயல்பட்டு வரும் சட்டக் கல்லூரியில் 5 ஆம் ஆண்டு படித்து வரும் மேடவாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும், அதே வகுப்பில் படித்து வரும், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவருக்கும் முன் விரோதம் இருந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், இருவருக்கும் கல்லூரியில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த கார்த்திக், வீட்டிலிருந்து வரும்போதே பட்டாக் கத்தியுடன் கல்லூரிக்கு வந்துள்ளார்.

அங்கு, கல்லூரி வளாகத்தில் அஸ்வினுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே, தான் மறைத்து வைத்திருந்திருந்த பெரிய பட்டாக் கத்தியை எடுத்து, அஸ்வினை சராமறியாக தாக்கி உள்ளார். அப்போது, கத்தியால் தாக்கியதை, அஸ்வின் தனது கையாலேயே தடுத்துள்ளார். இதனால், அவர் கை மற்றும், கழுத்து மற்றும் தலை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கையில் ரத்தம் சொட்டச் சொட்ட, அந்த தாக்குதலை அஸ்வின் தடுத்துக்கொண்டிருந்ததைக் கவனித்த சக மாணவர்கள் ஓடி வந்து, கத்தியிடமிருந்து பட்டாக் கத்தியைப் பறித்து, சண்டையை விலக்கி விட்டனர்.

இதனையடுத்து, ரத்த வெள்ளத்தில் மிதந்த அஸ்வினை சக மாணவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து, விரைந்து வந்த போலீசார், மாணவர்கள் கத்தியுடன் மோதிக்கொண்டது குறித்து, வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான கார்த்திக்கைத் தேடி வருகின்றனர்.

இதனிடையே, மாணவர்கள் பட்டாக் கத்தியுடன் மோதிக்கொண்ட வீடியோ காட்சிகள், தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.