சென்னை ஐஐடியில் மாணவி ஃபாத்திமா லத்திப் தற்கொலை செய்துகொண்டதையடுத்து, பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

கேரளா மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்திப், சென்னை ஐஐடியில் தங்கி, படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 8 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி அளவில், தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மாணவி தற்கொலை செய்துகொள்ளும் முன், தனது தந்தைக்கு அவர் குறுந்தகவல் அனுப்பி உள்ளார். அதில், “என் தற்கொலைக்குச் சென்னை ஐஐடி இணைப் பேராசிரியர் பத்மநாபன் உட்பட 3 பேராசிரியர்கள் தான் காரணம்” என்று தகவலைச் சொல்லிவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனையடுத்து, மாணவியின் தற்கொலை தமிழ்நாட்டில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும், சென்னை ஐஐடியைப் பற்றி பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களும் வெளியாகி உள்ளன.

அதன்படி, சென்னை ஐஐடியில் கடந்த 10 ஆண்டுகளில் 50 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

குறிப்பாக உயிரிழந்தவர்கள் அனைவரும், சிறுபான்மையினர் பிரிவைச் சேர்ந்தவர்களும், ஒடுக்கப்பட்ட சாதியினராகவும் உள்ளது தெரியவந்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம், தமிழக மக்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாணவியின் உயிரிழப்புக்குத் தமிழக அரசியல்கள் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, மாணவி தற்கொலை வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால், மாணவி பாத்திமா தற்கொலை விவகாரத்தில், மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தற்போது விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

இதனிடையே, ஐஐடியில் தற்கொலை செய்திகொண்ட மாணவி பாத்திமாவின் தந்தை, இன்று பிற்பகலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.