ஐ.டி ரெய்டின்போது பாத்ரூம் ரகசிய கேமரா பதிவுகள் சிக்கியதால், ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை அடையாறில் உள்ள “அஷ்வினி பிஷரிங்” நிறுவனத்தில் கடந்த 3 நாட்களாகத் தொடர்ந்து வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். அப்போது, அந்த நிறுவனத்தில் உதவி கணக்காளர் செந்தில்குமார் வசித்து வந்த வடபழனியில் உள்ள அவரது வீட்டிலும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, வீட்டில் கணக்கில் காட்டாமல் வைத்திருந்த 5 சவரன் தங்க நகைகள், அவர் பயன்படுத்தி வந்த லேப்டாப் மற்றும் “ஹார்டு டிஸ்க்” ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனிடையே, ஐ.டி ரெய்டின் சோதனையால், தனது வீட்டிற்குச் செல்லாமல் இருந்த செந்தில்குமார், கடந்த சில நாட்களாக அலுவலகத்திலேயே முடங்கி உள்ளார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவில் அவர் தனது அலுவலகத்திற்குள்ளேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஐ.டி ரெய்டின் சோதனையில், செந்தில்குமாருக்கு சொந்தமான “ஹார்டு டிஸ்க்” ஒன்றை அதிகாரிகள் கைப்பற்றியதாகவும், அதில் அலுவலகத்தில் உள்ள பெண்கள் கழிவறையில்கேமரா பொருத்தி செந்தில்குமார் வீடியோ பதிவு செய்ததாகவும், அந்த வீடியோ பதிவு அதிகாரிகள் கையில் கிடைத்துள்ளதால், அதை எதிர்கொள்ள முடியாமல் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, செந்தில்குமார் தற்கொலை செய்யவில்லை என்றும், அவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், செந்தில்குமாரின் உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும், செந்தில்குமார் தற்கொலை தொடர்பாக, அவர் பணியாற்றி வந்த நிறுவனம் சார்பில் இதுவரை எந்த விளக்கம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.