சென்னையில் குழந்தைகளின் ஆபாச படங்கள் அதிகளவில் இணையத்தில் தேடப்படுவதாக, அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, உலகமே தங்கள் வீடுகளில் முடங்கி உள்ளது. அதன்படி, தமிழகம் உட்பட இந்தியாவே, வீட்டில் முடங்கி உள்ளது.ஆனால், ஊரடங்கு காலத்திலும், இணையத்தில் ஆபாச படங்கள் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, உலகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதிலும் குறிப்பாக, இந்தியாவில் சில குறிப்பிட்ட மாநிலங்களில் குழந்தைகளின் ஆபாச படங்களை அதிகம் பேர் தேடி பார்த்துள்ளதாகவும், அதிர்ச்சிகரமான புள்ளி விபரங்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக ஐ.சி.பி.எஃப், (Indian Child protection Fund) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, இந்த ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் அதிக அளவிலான ஆபாச படங்கள், இணையத்தில் பார்க்கப்பட்டுள்ளதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், இந்தியாவின் மிக முக்கியமான 100 நகரங்களைக் கண்காணித்ததில், சென்னை, புவசேஷ்வரில் அதிக அளவில், குழந்தைகளின் ஆபாச படங்கள் தேடி தேடி பார்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை, புவசேஷ்வருக்கு அடுத்தபடியாக டெல்லி, கொல்கத்தா, மும்பை, ஆகிய பெரு நகரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பெரு நகரங்கள் இல்லாமல், 2 ஆம் கட்ட நகரங்களாக உள்ள ஆக்ரா, லக்னோ, சிம்லா, திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களிலும், குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் அதிக அளவில் பார்க்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிராக 1.41 லட்சம் குற்றங்களும், கடந்த 2017 ஆம் ஆண்டு 1.29 லட்சம் குற்றங்களும், கடந்த 2016 ஆம் ஆண்டு 1.06 லட்சம் குற்றங்களும் நடந்துள்ளதாகத் தேசிய குற்றப்பதிவு பணியகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை குழந்தைகளுக்கு எதிராக 3.77 லட்சம் குற்றங்கள் நடந்துள்ளதாகவும் தேசிய குற்றப்பதிவு பணியகம் சுட்டிக்காட்டி உள்ளது.

அதேபோல், இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஆபாச இணையதளங்களின் பார்வையாளர்கள் எண்ணிக்கை தற்போது 95 சதவீதம் அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.