சென்னை விமான நிலையத்தில் நகையைக் கேட்டுப் பயணி ஒருவர் கடத்தப்பட்டார்.

சிங்கப்பூரிலிருந்து சென்னை வருவதற்காக, அங்குள்ள விமான நிலையத்தில் தணிகைவேல் என்பவர் காத்திருந்தார். அப்போது, சிங்கப்பூர் விமான நிலையம் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தனது உறவினர் சென்னை விமான நிலையத்தில் காத்திருப்பதாகவும், அவரிடம் இந்த நகையைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கூறி 22 சவரன் நகைகளைக் கொடுத்து அனுப்பி உள்ளார்.

பின்னர், தணிகைவேலின் அடையாளங்கள் பற்றி, சென்னை விமான நிலையத்தில் காத்திருந்த தனது உறவினர்களுக்கு அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, சென்னை விமான நிலையம் வந்த தணிகைவேலுவிடம், தங்களிடம் கொடுக்கச் சொன்ன நகைகளைச் சிலர் கேட்டுள்ளனர். ஆனால், நகைகளைக் கொடுக்காமல், அவற்றைத் தொலைத்துவிட்டதாக அவர் இயல்பாகப் பதில் அளித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த 6 பேர் கொண்ட கும்பல், சென்னை விமான நிலையத்திலிருந்து தணிகைவேலைக் கடத்திச் சென்றனர். இதனையடுத்து, அவரது தந்தைக்கு போன் செய்த அந்த கும்பல், 22 சவரன் தங்க நகைகள் அல்லது அதற்கு ஈடாக 7 லட்சம் ரூபாய் பணத்தைக் கொடுத்து, மகனை மீட்டுச் செல்லுமாறு கூறியுள்ளனர்.

அவரும், பணத்தைக் கொடுத்து மகனை மீட்டுச் செல்வதாகக் கூறிவிட்டு, போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இதனையத்தொடர்ந்து, கடத்தல் கும்பலிடம் பணம் கொடுக்க வரும்போது, அங்கு மறைந்திருந்த போலீசார், அந்த கும்பலை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மேலும், இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.