தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பள்ளிக்கரணை மகேஸ்ரவன் நகரைச் சேர்ந்த பாரதிராஜ் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு 4 வயதில் கிரித்திக்ராஜ் என்ற மகன் இருந்தார்.

கிரித்திக்ராஜ் அங்குள்ள தனியார் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வந்தார். இந்நிலையில், பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பிய கிரித்திக்ராஜ், வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்தார்.

அப்போது, யாரும் எதிர்பார்க்காத நிலையில், வீட்டின் முன்பு இருந்த நீர்த்தேக்க தொட்டியில் கிரித்திக்ராஜ், தவறி விழுந்துள்ளார்.

இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அந்த சிறுவனை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுவன் உயிரிழந்தது குறித்து வழக்குப் பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, சிறுவன் தண்ணீர் தொட்டியில் விழுந்த உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.