டிக் டாக் நட்பால், திருமணமான பெண் மற்றொரு பெண்ணோடு ஓடிப்போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,

ஆந்திராவின் குர்ணூல் மாவட்டம் அடொனி நகரைச் சேர்ந்த ரவி - அர்ச்சனா தம்பதிக்குக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

ரவி ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இதனால், அவர் வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், வீட்டிலிருந்த அர்ச்சனா, சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான டிக் டாக்கில், வீடியோ பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அப்போது, அவருக்கு அஞ்சலி என்ற பெண் அறிமுகமாகி உள்ளார்.

இதனையடுத்து, அர்ச்சனாவும் - அஞ்சலியும் நெருங்கி பழகத் தொடங்கினார். ரவி வீட்டிற்கு வராத நிலையில், அஞ்சலி தினமும் அர்ச்சனா வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, அர்ச்சனா தனது 2 குழந்தைகளுடன், வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இதனையடுத்து, அவர் அஞ்சலியுடன் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த ரவி மற்றும் அர்ச்சனாவின் பெற்றோர், அர்ச்சனாவையும், அவரது 2 குழந்தைகளையும் மீட்டுத் தரக்கோரி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அஞ்சலி மற்றும் அர்ச்சனா ஆகியோரின் சமூக வலைத்தள பக்கங்களைக் கண்காணித்து வருகின்றனர். மேலும், அவர்களது செல்போனை வைத்தும், அவர்கள் இருக்கும் இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனிடையே, டிக் டாக் தோழியை நம்பி திருமணமான பெண் ஒருவர், தன் 2 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.