காரில் சென்றவர் மீது வெடிகுண்டு வீசி, சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த அன்பு ரஜினி, அப்பகுதியில் சில கட்டபஞ்சாயத்துகளில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. இவர் மீது, அங்குள்ள காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், முத்தியால்பேட்டை பகுதியில் நள்ளிரவில் அவர் காரில் வந்துகொண்டிருக்கும்போது, மர்ம நபர்கள் சிலர் நாட்டு வெடிக்குண்டு வீசி அவரை தாக்கி உள்ளனர். அதில், நிலைகுலைந்துபோன அவர், காரை மேற்கொண்டு இயக்க முடியாமல் அங்கேயே நின்றுள்ளார்.

இதனையடுத்து, காரிலிருந்து அன்பு ரஜினியை வெளியே இழுத்து, அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு, மர்ம நபர்களில் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் மிதந்த அன்பு ரஜினி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து விரைந்து வந்த முத்தியால்பேட்டை போலீசார், உடலை மீட்டு பிராதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொலை முன்விரோதம் மற்றும் தொழில் போட்டி காரணமாக நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.