இளம் காதல் ஜோடியின் லீலையை நேரில் பார்த்த 8 வயது சிறுவன் குத்திக்கொலைசெய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த சொட்டகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த தங்கராஜ் - சுமதி தம்பதியரின் இளைய மகன் புவனேஸ், பெற்றோர்கள் வேலைக்குச் சென்ற நிலையில், அந்த பகுதியில் உள்ள மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளான்.

அப்போது, அந்த பகுதியில் இளம் வயது காதல் ஜோடி ஒன்று, தனது சில்மிஷ லீலைகளை நடத்திக்கொண்டிருந்ததாகவும், அதை அந்த சிறுவன் பார்த்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால், பயந்துபோன இந்த இளம் சிறுமி, “அந்த சிறுவன் எனது பக்கத்து வீட்டில் வசிப்பவன். அவன் என்னைப் பற்றி என் வீட்டில் சொன்னாலும் சொல்லிவிடுவான்” என்று தனது காதலனிடம் கூறியிருக்கிறாள்.

இதனையடுத்து, தனது காதலியை விட்டு, அந்த சிறுவனைத் தனியாக அழைத்து வர செய்துள்ளான் அந்த காதலன்.

சிறுமியும் அவனைத் தனியாக அழைத்து வந்த நிலையில், அந்த காதலன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிறுவனில் கழுத்தில் குத்தி கொலை செய்துவிட்டு, அந்த பகுதியில் உள்ள முட்புதருக்குள் சிறுவனின் உடலை வீசிவிட்டுச் சென்றுவிட்டான்.

மதியம் வரை அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை அதன்பிறகு காணவில்லை என்று, சிறுவனின் அண்ணன் அந்த பகுதி முழுவதும் தேடிவிட்டு தனது பெற்றோரிடம் கூறியுள்ளான்.

இது குறித்து அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அடுத்த நாள் சிறுவனின் உடல் அந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, சிறுவனை அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி அழைத்துச் சென்றதாகக் கூறப்பட்டது. இதனையடுத்து, அங்குள்ள பள்ளியில் படிக்கும் அந்த சிறுமியை கண்டுபிடித்த போலீசார், கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் அந்த சிறுமியின் காதலனையும் அழைத்து போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது, அந்த காதலன் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த காதலனிடம் இது குறித்து மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே, இளம் காதல் ஜோடியின் லீலையை நேரில் பார்த்த 8 வயது சிறுவன், குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.