இம்சை அரசன் புலிகேசி மீண்டும் வருகிறார் ! இரண்டாம் பாக பணிகள் தீவிரம் !
By Sakthi Priyan | Galatta | November 21, 2018 12:35 PM IST
சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேல் கதாநாயகனாக நடித்து 2006-ல் வெளிவந்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற பெயரில் இயக்குனர் ஷங்கர் தயாரிக்க முடிவு செய்து அதற்கான பணிகளும் நடந்தன.
இதற்கிடையே சில கருத்து வேறுபாடுகள் காரணமாக வடிவேலு படத்திலிருந்து வெளியேறுவதாக செய்திகள் கசிந்து வந்தன. இந்நிலையில், இம்சை அரசன் படக்குழுவுக்கும், வடிவேலுவுக்கும் இடையே சுமூகம் ஏற்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தற்போது மதுரையில் இருக்கும் வடிவேலு, படப்பிடிப்புக்காக சென்னை வர சம்மதித்திருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக படப்பிடிப்புக்காக சென்னையில் பெரிய அரங்குகள் அமைக்கப்பட்டு, பல்வேறு துணை நடிகர், நடிகைகளும் ஒப்பந்தமாகினர்.
இதுமட்டுமல்லாமல் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்கவிருப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு குறித்த நேரத்தில் தொடங்கும் பட்சத்தில் படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படக்குழுவினர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்.