மாணவிக்குப் பெண் குழந்தை! 17 வயது சிறுவன் கைது
By Arul Valan Arasu | Galatta | August 31, 2019 17:43 PM IST
திருப்பூர் அருகே பள்ளி மாணவிக்குப் பெண் குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள வடுகபாளையத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி, கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து, பல்லடம் அரசு மருத்துவமனையில் அந்த சிறுமி அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி கருவுற்று இருப்பதாகத் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து மருத்துவமனை பிரசவ வார்டில் மாணவி அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த மகளிர் போலீசார், விசாரணை நடத்தினர்.
அப்போது, தான் 11 ஆம் வகுப்பு படிக்கும்போது, சக மாணவனைக் காதலித்ததாகவும், அப்போது காதலனுடன் நெருக்கமாக இருந்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், அந்த மாணவன், 12 ஆம் வகுப்பைத் தொடர முடியாமல், படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, வேலைக்குச் சென்றுவிட்டதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் காதலனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்த போலீசார், அவனைச் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிறுவயதிலேயே சிறுமி குழந்தைப் பெற்றுக்கொண்டதால், சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், உயர் சிகிச்சைக்காக அவர் கோவை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே, குழந்தைப் பெற்றெடுத்த சிறுமி, குழந்தையைப் பாதுகாக்க முடியாது என்பதால், குழந்தையைக் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. சிறுமிக்குத் தகுந்த வயது வந்ததும், குழந்தை மீண்டும் அவரிடமே ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.