சொத்துப் பிரச்சனை காரணமாக மகனே, தந்தையைக் கழுத்தை அறுத்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த கரையான்பட்டியைச் சேர்ந்த குபேந்திரன், முதல் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, முறைப்படி விவகாரத்து பெற்று 2 வது திருமணம் செய்து கொண்டார். இவருக்கு முகத்துப்பாண்டி, பூபாண்டி என்ற இரு மகன்களும், ரேணுகா என்ற மகளும் உள்ளனர்.

குபேந்திரன் தனது குடும்பத்தில் ஏற்பட்ட சில பிரச்சனை காரணமாக, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே வீட்டை விட்டு வெளியேறி, ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை ஆற்றின் கரையோரம் குடிசை போட்டு தனியாக வசித்து வந்துள்ளார். இங்கு, குள்ளபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டு, குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இதனையடுத்து, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குபேந்திரனுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு, அவருக்கு ஒரு கால் அகற்றப்பட்டது. இதனையடுத்து, அவர் வீட்டில் படுத்த படுக்கையானார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குபேந்திரன், அவரது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்துள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், சொத்திற்காகப் பெற்ற மகனே, தந்தையைக் கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து, குபேந்திரனின் மூத்த மகன் முகத்துப்பாண்டியை போலீசா் கைது செய்தனர். இதனிடையே, பெற்ற மகனே தந்தையைக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.