ஒருவருடமாகச் சிறுமியை நாசம் செய்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள ஆதிதிருவரங்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரங்கராஜ், ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர், அதே பள்ளியில் 5 வகுப்பு படிக்கும் ஒரு சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல் செய்வதாகப் பள்ள தலைமை ஆசிரியரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து, சிறுமியின் பெற்றோருக்குத் தலைமை ஆசிரியர் தகவல் தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், திருக்கோவிலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆசிரியர் ரங்கராஜிடம் விசாரணை நடத்தினர். இதில், கடந்த ஓராண்டாகப் பள்ளியின் அருகில் உள்ள ஆசிரியரின் வீட்டிற்குச் சிறுமியைத் தனியாக அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், இது குறித்து வெளியே சொன்னால் கொன்று விடுவதாகவும் அவர் சிறுமியை மிரட்டி வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஆசிரியர் ரங்கராஜை போலீசார் சிறையில் அடைத்தனர்.