ஹீரோ திரைப்பட கதை திருட்டா ? கொந்தளித்த இயக்குனர் மித்ரன்
By Sakthi Priyan | Galatta | December 25, 2019 13:00 PM IST
இரும்புத்திரை படத்தின் மூலமாக இயக்குனராக தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் பி.எஸ்.மித்ரன். இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்திகேயனை வைத்து ஹீரோ என்ற தலைப்பில் சூப்பர் ஹீரோ படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான இப்படம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் கதை முற்றிலும் வேறு ஒருவரின் கதை என எழுத்தாளர் சங்க தலைவர் பாக்கியராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு படக்குழுவினருக்கு அதிர்ச்சியை அளித்தார். இதனையடுத்து, இது தொடர்பாக பி.எஸ்.மித்ரன் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது தான் ஏற்கனவே தன்னுடைய கதையை பதிவு செய்துள்ளதாகவும், தனக்கு முன்பாக மற்றோரு நபர் பதிவு செய்திருக்கிறார் என்பதால் எப்படி இரண்டும் ஒரே கதையாகி விடுமா ? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஒரே மாதிரியான சிந்தனைகளை அங்கீகரிக்க மறுக்காதீர்கள் என்று கூறினார்.
ஹீரோ திரைப்படத்திற்கான கதையை செய்தித்தாள்கள் மூலமாக தான் படத்தின் கருவை எடுத்துள்ளதாகவும், தான் மட்டுமில்லாமல் மேலும் மூன்று நபர்கள் இணைந்து தான் இந்த படத்தின் கதையை உருவாக்கியதாகவும், அதற்கான ஆதாரமும் தன்னிடம் உள்ளதாக எடுத்துரைத்தார்.