மனைவியைக் கொன்று ஓவராக நடித்த கணவன் மாட்டிக்கொண்டது எப்படித் தெரியுமா?
By Arul Valan Arasu | Galatta | August 30, 2019 18:14 PM IST
மனைவியைக் கொன்றுவிட்டு ஓவராக நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பொன்னாபுரம் பகுதியில் வசித்து வருகிறார் சக்திவேல். இவருக்கும், இவரது மனைவி கவுசல்யாவிற்கும் திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகும் நிலையில், இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.
கடந்த சில வருடங்களாகவே கவுசல்யா மீது சந்தேகப்பட்டு, அடிக்கடி சக்திவேல் சண்டை போட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மனைவி மீது சந்தேகம் முற்றிய நிலையில், கடந்த மாதம் 26 ஆம் தேதி இரவு, கணவன் - மனைவி இருக்கும் இடையில் பெரிய அளவில் சண்டை நடந்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து நள்ளிரவு ஆனதும், மனைவியை அடித்தே கொலை செய்து, சாக்கில் போட்டுக் கட்டி தொலைவில் உள்ள கிணற்றில் போட்டுவிட்டு, யாருக்கும் தெரியாமல் வந்துள்ளார். பின்னர், 10 நாட்கள் கழித்து மனைவியைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரிக்கையில், கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை வரும் என்று அக்கம் பக்கத்தில் கூறியுள்ளனர். மேலும், மனைவி காணவில்லை என்று, கணவன் சக்திவேல் ஓவராக நடந்துகொள்வதாகவும் அக்கம் பக்கத்தினர் போலீசாரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், சக்திவேலைத் தனிப்பட்ட முறையில் அழைத்து விசாரித்துள்ளனர். இதனால், பயந்துபோன சக்திவேல், மனைவியை அடித்து கொலை செய்து கிணற்றில் தூக்கி வீசியதை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார், இறந்துபோன கவுசல்யாவின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.