செக்ஸ் ஆசிரியர் சரவணனுக்கு எதிராக களமிறங்கிய சிறுமிகளும், பெற்றோர்களும்..!
By Arul Valan Arasu | Galatta | September 19, 2019 16:50 PM IST
செக்ஸ் ஆசிரியர் சரவணனுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் புதன் சந்தை அருகில் உள்ள எஸ்.உடுப்பத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், கடந்த 4 ஆண்டுகளாகச் சரவணன் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில், இவருக்கும் இதே பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வரும் ஒரு பெண்ணுக்கும் இடையே, தகாத உறவு இருந்துள்ளது. இதனைப் பள்ளியின் தலைமை ஆசிரியரும், குழந்தைகளின் பெற்றோர்களும் கண்டித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, கடந்த 17 ஆம் தேதி பள்ளி வளாகத்திலேயே, பள்ளி மாணவி ஒருவருக்கு ஆசிரியர் சரவணன், பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்த நிலையில், கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, பள்ளியின் வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியர் சரவணனைத் துவைத்து எடுத்த ஊர் மக்கள், அவரின் சட்டையைப் பிடித்து ரோட்டிற்கு இழுத்து வந்து, தர்ம அடி கொடுத்தனர்.
இதனையடுத்து, ஆசிரியர் சரவணன் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. இதனால், அவர் அருகில் உள்ள கூத்தமூக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், இன்று சரவணன் பள்ளிக்கு வந்துள்ளார். இதனால், அதிர்ப்தி அடைந்த கிராம மக்கள், தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஆசிரியர் தங்கள் ஊர் பள்ளிக்கூடத்திற்கு வேண்டாம் என்றும், கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
குறிப்பாக, குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் சரவணனை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் ஊர்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், மாவட்ட கல்வி அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப்போய் உள்ளனர்.