இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த போலி டாக்டர்!
By Arul Valan Arasu | Galatta | September 14, 2019 16:00 PM IST
சென்னையில் இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 32 வயதான கார்த்திக், தான் சென்னை அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றுவதாகச் சிலரிடம் கூறி வந்துள்ளார். மேலும், தனக்குத் தாய் தந்தை இல்லை என்றும், அவர் கூறியதை நம்பி, வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது மகளைத் திருமணம் செய்து வைக்க முன் வந்தார்.
இதனிடையே, தினமும் மருத்துவமனைக்குச் செல்வதாக அவர்கள் முன்பு காலை, மாலை அவர் காரில் சென்று வந்துள்ளார். இதையடுத்து இருவருக்கம் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வில்லிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடந்தது.
தொடர்ந்து, நேற்று வரவேற்பு நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. அப்போது, கார்த்திக் டாக்டருக்கு படிக்கவில்லை என்றும், அவர் போலி டாக்டர் என்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கார்த்திக் போலி டாக்டர் என்பது தெரியவந்தது.
இதனால், அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், தங்களிடம் இதுவரை ஏமாற்றி 12 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தனர். இது தொடர்பாகப் பெண் வீட்டாரும் புகார் அளித்தனர்.
இதனையடுத்து, இளம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த போலி டாக்டர் கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். மேலும் இது போல், கார்த்திக் மோசடியில் ஈடுபட்டரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.