உக்ரைனில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் நிறைந்த சூழலில் உடனடி நிதி உதவி அளிக்க தயார் என உலக வங்கி அறிவித்து உள்ளது.

ukraine warமுன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன், நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்தது. உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் இல்லை என கூறிய ரஷியா, பெலாரஸ் நாட்டு ராணுவத்துடன் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவதற்காகவே படைகளை குவித்து வருகிறோம் என தெரிவித்தது. அதே வேளையில் உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் பிரிவினைவாதிகளை தூண்டிவிட்டு, அவர்கள் மூலம் உக்ரைனுக்குள் ஊடுருவதற்கான வேலைகளை ரஷியா செய்தது.

உக்ரைனின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லை பகுதிகளில் ரஷிய கூட்டமைப்பு ஏவுகணைகளை பொழிந்து வருகின்றன.  இதனால், லுஹான்ஸ்க், சுமி, கார்கிவ், செர்னிஹிவ் மற்றும் ஜைட்டோமைர் பகுதிகளில் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இந்த தாக்குதல்கள் எல்லை பிரிவுகள், எல்லையில் ரோந்து பகுதிகள் மற்றும் சோதனை சாவடி பகுதிகளில் நடத்தப்படுகின்றன.  இதற்காக ரஷியா, சிறிய வகை பீரங்கிகள், கனரக மற்றும் சிறிய ஆயுதங்களை கொண்டு தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது.  ரஷியாவின் கிரீமியா சுயாட்சி பகுதியில் இருந்தும் தாக்குதல் நடத்தப்படுகிறது என உக்ரைன் தெரிவித்து உள்ளது.

உக்ரைனில் உள்ள ராணுவ தளங்கள், விமான தளங்கள் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் மீதான போரை ரஷிய நிறுத்த உலக நாடுகள் உதவ வேண்டும் என உக்ரைன் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.  உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என  ரஷியாவுக்கு ஜெர்மனி வேண்டுகோள் விடுத்துள்ளது. 

உக்ரைனில் ரஷ்யா தாக்குதலில் 137 பேர் பலியாகி உள்ளதாகவும் ரஷியாவுக்கு எதிராக தனிந்தனியாக போராடி வருகிறோம் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்ய படையை எதிர்த்து உக்ரைன் ராணுவத்துக்கு துணையாக நிற்க 10 ஆயிரம் தானியங்கி இயந்திர துப்பாக்கிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தியால் பல்வேறு நாடுகளும் தங்களுடைய தூதர்களை திரும்ப பெற்றுள்ளன.  இதேபோன்று மாணவர்கள் உள்பட இந்தியர்களை நாடு திரும்ப மத்திய அரசும் உத்தரவிட்டது.  இதற்கேற்ப இந்திய அரசு, உக்ரைனில் இருந்து ஏர் இந்தியா விமானம் வழியே அவர்களை திருப்பி அழைக்கும் பணியை மேற்கொண்டது. ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தன.

இந்நிலையில், உக்ரைனின் டான்பாஸ் பிரிவினைவாதப்பகுதி மக்களை பாதுகாக்க ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு எடுத்து இருக்கிறேன் என்று கூறிய ரஷிய அதிபர் புதின் அதிரடியாக போர் பிரகடனம் வெளியிட்டார். உக்ரைனின் ராணுவ நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி, அந்நாட்டுக்குள் ரஷிய வீரர்கள் நுழைந்துள்ளனர் என புதின் தெரிவித்துள்ளார்.  உக்ரைனை ஆக்கிரமிக்கும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்நிலையில், போரை தவிர்க்க ரஷியாவிடம் ஐ.நா. அமைப்பு வைத்த வேண்டுகோள் ஒருபுறம் இருக்க, தொடர்ந்து உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார் என தகவல்கள் தெரிவித்தன. நேற்று ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை ரஷியா நடத்தி உள்ளது என்று உக்ரைன் எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

ரஷியாவுடனான முதல் நாள் போரில் இதுவரை 137 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காணொலியின் மூலமாக உரையாற்றிய அவர், ரஷிய படைகளின் பெரிய அளவிலான தாக்குதலுக்கு உள்ளான உக்ரைனியர்கள் 137 பேர் உயிரிழந்தனர். மேலும் 316 பேர் படுகாயமடைந்து உள்ளனர்.  அதில் எங்கள் இராணுவம் மற்றும் பொதுமக்கள் அடங்குவர் என்று தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து, உக்ரைனில் போர் பதற்றம் நிறைந்த சூழலில் உடனடி நிதி உதவி அளிக்க தயார் என உலக வங்கி அறிவித்து உள்ளது. இதுபற்றி வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில், உக்ரைனுக்கு உடனடியாக உதவிகள் வழங்க தயாராக இருக்கிறோம்.  அதிவேக நிதி பகிர்வு உள்பட உதவிகளை வழங்குவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம்.

மேலும் இதுதவிர உலக வங்கி குழுவானது உதவிகளை உடனடியாக வழங்குவதற்கு, எங்களுடைய அனைத்து நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு உபகரணங்களை பயன்படுத்தி கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது. உலக வங்கி குழுவின் தலைவர் டேவிட் மல்பாஸ், அதிர்ச்சிகர வன்முறை மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றால் உலக வங்கி குழுவானது அதிர்ச்சியடைந்து உள்ளது.  உக்ரைனின் நீண்டகால நண்பராக உள்ள நாங்கள், இந்த நெருக்கடியான தருணத்தில் உக்ரைன் மக்களுக்கு ஆதரவுடன் இருப்போம் என்றும் தெரிவித்து உள்ளார்.