உக்ரைன் மீதான போர் 18-வது நாளாக நீடித்த நிலையில், ரஷிய படைகளின் தாக்குதல்களில் உக்ரைன் நகரங்கள்தீப்பற்றி எரிந்து வருகின்றன.

உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ம் தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர். அந்நாட்டின் விமான நிலையம், துறைமுகங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட ராணுவ தளவாட கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்தது.

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 18-வது நாளாக நீடித்து வருகிறது.  இதில், இரு நாட்டு தரப்பிலும் பலர் உயிரிழந்து உள்ளனர்.  போரை முன்னிட்டு லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர்.  அவர்களில் இந்தியர்களும் அடங்குவர்.  மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி ஆகிய நாடுகளில் இருந்து வெளியேறி இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

இந்நிலையில் ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைன் சின்னாபின்னமாகி வருகிறது. அங்கு ஏவுகணை, பீரங்கி தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. போர் பதற்றத்தால் உக்ரைனில் வாழும் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளை நோக்கி தஞ்சம் அடைந்து வருகிறார்கள். கல்வி, வேலைவாய்ப்புக்காக உக்ரைனுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சென்றிருந்தனர். 

இதில் குறிப்பாக தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் உக்ரைன் பல்கலைக்கழகங்களில் மருத்துவம், என்ஜினீயரிங் படித்து வருகிறார்கள். மெட்ரோ சுரங்கங்களிலும், பதுங்கு குழிகளிலும் பதுங்கி உயிரை கையில் பிடித்துக்கொண்டிருந்த அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. உக்ரைன் வான்பகுதி மூடப்பட்ட நிலையில், அண்டை நாடுகளின் எல்லைக்கு வரவழைத்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. ‘ஆபரேசன் கங்கா’ என்ற பெயரில் இந்த மீட்புப்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும் என உலக நாடுகள் கவலையுடன் எதிர்பார்த்துக்கொண்டிக்கும் அதே வேளையில் ரஷியா படைகள் நாளுக்கு நாள் தாக்குதலின் வேகத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. இதனால் உக்ரைன் நகரங்கள் பற்றி எரிந்து வருகின்றன.

உக்ரைனில் பாதுகாப்பான இடம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அந்த நாட்டின் அனைத்து நகரங்கள் மீதும் ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதல்களை தொடுத்து வருகின்றன. வான்வழியாக ரஷிய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வரும் அதே வேளையில், தரை வழியாகவும் ரஷிய படைகள் உக்ரைன் நகரங்களுக்குள் முன்னேறி வருகின்றன.

இதனிடையே உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் இறங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் புதினை நேரில் சந்தித்து பேச தயாராக இருப்பதாக ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

ஏற்கனவே இதேபோன்று நேரடி பேச்சுவார்த்தைகளுக்கு முன்வைக்கப்பட்ட யோசனைகளை புதின் நிராகரித்துவிட்ட நிலையில் ஜெலன்ஸ்கியின் இந்த அறிவிப்பை அவர் ஏற்பாரா என்ற கேள்வி இருந்து வந்தது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்க தான் விரும்பவில்லை என புதின் தெரிவித்தார். துருக்கி அதிபர் தாயீப் எர்டோகனுடன் நடத்திய தொலைபேசி உரையாடலின்போது இதனை அவர் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் உக்ரைன்-ரஷியா இடையிலான அதிகாரிகள் மட்டத்திலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை அடுத்த வாரம் தொடங்கும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் மூத்த ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் உக்ரைன் - ரஷியா இடையே இன்று காணொலி காட்சியின் வாயிலாக மீண்டும் பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரஷியா-உக்ரைன் பேச்சுவார்த்தை இன்று காலை 10:30  மணிக்கு தொடங்கும் என்று உக்ரைனிய தூதுக்குழுவை மேற்கோள் காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

இரண்டு வாரங்களுக்கும் மேலாக ரஷிய மற்றும் உக்ரேனியப் படைகளுக்கு இடையே நடந்த நேரடிச் சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பேச்சுவார்த்தையில் முன்னேறி வருவதாக இரு தரப்பும் கூறியதை அடுத்து அடுத்த சுற்று பேச்சு வார்த்தை உறுதியாகி உள்ளது. முன்னதாக ரஷியாவின் பேச்சுவார்த்தைக் குழுவின் மூத்த உறுப்பினரான லியோனிட் ஸ்லட்ஸ்கி, அண்டை நாடான பெலாரசின் எல்லையில் நடத்தப்பட்ட பல சுற்று பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து "குறிப்பிடத்தக்க முன்னேற்றம்" ஏற்பட்டதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.