அமெரிக்காவில் ஒமிக்ரான் பரவலால் மருத்துவமனையில் குழந்தைகள் நல வார்டு நிரம்பி வழிவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் அதிர்வை உருவாக்கி உள்ளன.

கடந்த நவம்பர் 24 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் முதன்முறையாக உருமாறிய கொரோனாவின் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது.  இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தபோதிலும் இந்த ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

குறிப்பாக அமெரிக்காவில் ஒமிக்ரான் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 90 ஆயிமாக உள்ளது. இதைத் தொடர்ந்து நடத்தப்படும் சோதனையில் பலருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகி வருகிறது.

omicron US spreadகொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றால் பெரியவர்களை விட குழந்தைகள் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஆகும். இதனால் அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே உள்ளது.

கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி முதல் தற்போது வரை 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் தொற்றால் பாதிக்கப்படுவது 4 மடங்காக அதிகரித்து காணப்படுகிறது. இதுகுறித்து நியூயார்க் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

“அமெரிக்காவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனைகளிலும் குழந்தைகள் ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள். அமெரிக்காவில் 12 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனை சுகாதாரத்துறை உன்னிப்பாக கவனித்து வருகிறது. தொற்றில் இருந்து குழந்தைகளை காக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” இவ்வாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வின்படி கடந்த 7 நாட்களில் அன்றாடம் 1,90,000 ஆயிரம் பேருக்கு தினமும் தொற்று உறுதியாகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அங்கு கொரோனா பரிசோதனையில் சுணக்கம் நிலவுவதாக புகார் எழுந்துள்ளது. 

US Covid increaseஇதுகுறித்து கொரோனா பெருந்தொற்று ஆலோசகர் ஆண்டனி ஃபௌசி, "கொரோனா பரிசோதனையில் சுணக்கம் இருப்பது உண்மைதான். அடுத்த மாத துவக்கத்திலிருந்து இது சரியாகும்" என்று கூறியுள்ளார்.

கொரோனா பரிசோதனையில் சுணக்கம் ஒருபுறம் இருக்க, ஒமிக்ரான் பரவலால் அமெரிக்கர்கள் பலரும் தங்கள் புத்தாண்டு விடுமுறைப் பயணங்களை ரத்து செய்து வருகின்றனர். இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்தாகியுள்ளன.

இதேபோல் சீனாவிலும் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. முதன் முறையாக சீனாவில் தான் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவியது.

ஆனால் 3 மாதங்களில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. நீண்ட காலத்துக்கு பிறகு அங்கு மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. அங்கு தினசரி பாதிப்பு 158 ஆக உள்ளது.

அங்குள்ள ஜியான் நகரில் 1.3 கோடி மக்கள் வசித்து வருகிறார்கள். அந்த நகரில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. மேலும் ஒமக்ரான் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் ஜியான் நகரில் அமல்படுத்தப்பட்டுள்ளது.