“உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும்” என்று, ஐக்கிய நாடுகள் பொது சபையில் அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ள நிலையில், இந்த தீர்மானத்திற்கு 141 நாடுகள் ஆதரவு தெரிவித்த போதும்,  இந்தியா மீண்டும் புறக்கணித்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்யா - உக்ரைன் போர் 8 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த 24 ஆம் தேதி அதி காலை 4.50 மணி அளவில் அதிகாரப்பூர்வமான போரை தொடங்கிய நிலையில், இன்று வரை இடைவிடாமல் போர் தொடர்ந்து 8 வது நாளாக நடைபெற்று வருகிறது. இதனால், உக்ரைன் நாட்டில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொது மக்கள் தொடர்ச்சியாக கொல்லப்பட்டு வருகின்றனர்.  

இவற்றுடன், ரஷ்ய படைகள் தொடர்ச்சியாக உக்ரைனில் முன்னேறி வருகின்றன. இதனால், உக்ரைன் மிகப் பெரிய இழப்பை எதிர்கொண்டு வருகிறது. 

இதன் காரணமாக, உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் இந்த போர் குற்ற தாக்குதலுக்கு, பெரும்பாலன உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

இதன் காரணமாகவே, போர் குற்றம் புரிந்து வரும் ரஷ்யாவிற்கு எதிராக, பல்வேறு தடைகளையும் பல்வேறு உலக நாடுகள் விதித்து வருகின்றன.

இப்படியான அவசர சூழலில் தான், உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா சபையில் அவசர கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இந்த அவசர சிறப்பு கூட்டத்தின் முடிவில், “உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும்” என்று, இறுதியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன், “ரஷ்யாவிற்கும் - உக்ரைனுக்கும் இடையேயான இந்த போர் மோதலை அரசியல் ரீதியான பேச்சு வார்த்தை மூலம் மட்டுமே உடனே தீர்வுகாண வேண்டும்” என்றும், அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது. 

அதாவது, 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா. சபையில், இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 141 நாடுகள் வாக்களித்தன.

அத்துடன், இந்த தீர்மானத்திற்கு எதிராக 5 நாடுகள் மட்டுமே வாக்களித்தன. 

குறிப்பாக, இந்த வாக்களிப்பை இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் முற்றிலுமாக புறக்கணித்தன. 

இதனையடுத்து, பெரும்பான்மை ஆதரவுடன் “உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும்” என்று, இறுதியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது, இந்த தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய ஐ.நா. வுக்கான இந்திய உறுப்பினர் திருமூர்த்தி, “உக்ரைனில் இருந்து தங்கள் நாட்டு மாணவர்கள் உட்பட இந்தியர்கள் வெளியேற பாதுகாப்பான மற்றும் தடையற்ற பாதையை ஏற்படுத்த வேண்டும்” என்று, கேட்டுக் கொண்டார். 

அத்துடன், “இரு நாடுகள் இடையேயான கருத்து வேறுபாடுகளை, பேச்சு வார்த்தை மற்றும் தூதரக ரீதியில் மட்டுமே தீர்க்க முடியும் என்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளதாகவும்” திருமூர்த்தி விளக்கம் அளித்தார். 

குறிப்பாக, “ரஷ்யா - உக்ரைன் இடையே, உடனடி போர் நிறுத்தத்திற்கான சர்வதேச நாடுகளின் அழைப்பை இந்தியா ஆதரிப்பதாகவும்” இந்திய உறுப்பினர் திருமூர்த்தி, ஐ.நா.வில் இந்தியாவின் நிலைபாட்டை விளக்கி கூறினார்.

இதனால், சமூக ஆர்வலர்கள் மற்றும் அமைதியை விரும்புவர்கள் மத்தியில் இந்தியாவின் இந்த கருத்து விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.