20-வது நாளாக ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ம் தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர். அந்நாட்டின் விமான நிலையம், துறைமுகங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட ராணுவ தளவாட கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்தது

இதில், இரு நாட்டு தரப்பிலும் பலர் உயிரிழந்து உள்ளனர்.  போரை முன்னிட்டு லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர்.  உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும் என உலக நாடுகள் கவலையுடன் எதிர்பார்த்துக்கொண்டிக்கும் அதே வேளையில் ரஷியா படைகள் நாளுக்கு நாள் தாக்குதலின் வேகத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. இதனால் உக்ரைன் நகரங்கள் பற்றி எரிந்து வருகின்றன.

மேலும் உக்ரைனில் பாதுகாப்பான இடம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அந்த நாட்டின் அனைத்து நகரங்கள் மீதும் ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதல்களை தொடுத்து வருகின்றன. வான்வழியாக ரஷிய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வரும் அதே வேளையில், தரை வழியாகவும் ரஷிய படைகள் உக்ரைன் நகரங்களுக்குள் முன்னேறி வருகின்றன.

அதனைத்தொடர்ந்து நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு நகரங்களில் ரஷிய படைகள் பெரும் முன்னேற்றத்தை கண்டுள்ள நிலையில், தற்போது மேற்கு நகரங்களை குறிவைத்து தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளன. அதே சமயம் தலைநகர் கீவ் மற்றும் அதை சுற்றியுள்ள வடக்கு நகரங்களில் உக்ரைன் வீரர்கள் கடுமையாக எதிர்த்து சண்டையிட்டு வருவதால் அங்கு முன்னோக்கி செல்வது ரஷிய படைகளுக்கு சவாலாக உள்ளது. 

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனை தனது ஆளுகையின் கீழ் கொண்டு வரும் நோக்கில் அந்த நாட்டின் மீது ரஷியா நடத்தி வரும் போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. போரை உடனடியாக நிறுத்தி விட்டு தூதரக ரீதியில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள் என உலக நாடுகள் கூறுவதை தனது காதில் போட்டுக்கொள்ளாத ரஷியா படையெடுப்பின் வேகத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேலும் இரவு, பகல் பாராமல் ரஷிய படைகள் நடத்தி வரும் தொடர் குண்டு வீச்சுகளால் உக்ரைன் நகரங்கள் உருக்குலைந்து வருகின்றன. அந்த நாட்டின் முக்கிய விமான நிலையங்கள், ராணுவ தளங்கள், எண்ணெய் கிடங்குகள் ஆகியவை ரஷிய படைகளின் தாக்குதல்களில் நிர்மூலமாக்கப்பட்டு வருகின்றன.

ஆரம்பத்தில் உக்ரைனின் முக்கிய நகரங்களை மட்டும் குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வந்த ரஷிய படைகள் தற்போது பிற நகரங்கள் மீது தாக்குதல்களை விரிவுப்படுத்தியுள்ளனர். சிறிய நகரங்கள் மீது குண்டு மழை பொழிந்து வருகின்றன. 20-வது நாளாக இன்று ரஷிய படைகளின் தாக்குதல்கள் நீடித்து வருகின்றன. 

உக்ரைன் தலைநகர் கீவ் நகரை கைப்பற்ற முனைப்பு காட்டி வரும் ரஷிய படைகள், அந்நகரை நெருங்கிவிட்டன. கீவ் நகரின் மேற்கு பகுதியில் உள்ள  ஸ்வியாடோஷின்ஸ்கி மாவட்டத்தில் உள்ள அடுக்குமாடி  குடியிருப்பு மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.  அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் இருந்து தீ மற்றும் கரும்புகைகள் வெளியேறின. தீ அணைப்பு வீரர்கள் , கட்டிடத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரஷிய படைகளின் இந்த தாக்குதலில் ஒருவர் பலியாகியிருப்பதாகவும் மேலும் பலர் சிக்கியுள்ளதாகவும் மீட்பு பணி நடைபெற்று வருகிறது என்றும் மீட்பு பணிக்குழு தெரிவித்துள்ளது. 

உக்ரைன் ராணுவத்தின் ஜெனரல் அலுவலர் வெளியிட்ட தனது பேஸ்புக் பதிவில், “ முக்கிய துறைமுக நகரமான மரியுபோல் நகரை கைப்பற்ற ரஷிய படைகள் தாக்குதல்களை தொடங்கியிருப்பதாகவும் கார்கிவ் நகரின் மையப்பகுதி மீது கிழக்கில் இருந்து பீரங்கி தாக்குதல்களை தொடுத்து வருவதாகவும்” குறிப்பிட்டுள்ளார்.