இந்தியர்கள் வெளியேற உக்ரைனின் சுமி நகரில் தற்காலிகமாக தாக்குதல்களை நிறுத்துவதாக ரஷியா அறிவித்துள்ளது.

உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ம் தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர். அந்நாட்டின் விமான நிலையம், துறைமுகங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட ராணுவ தளவாட கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்தது.

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 9வது நாளாக நீடித்து வருகிறது.  இதில், இரு நாட்டு தரப்பிலும் பலர் உயிரிழந்து உள்ளனர்.  போரை முன்னிட்டு லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர்.  அவர்களில் இந்தியர்களும் அடங்குவர்.  மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி ஆகிய நாடுகளில் இருந்து வெளியேறி இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைன் சின்னாபின்னமாகி வருகிறது. அங்கு ஏவுகணை, பீரங்கி தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. போர் பதற்றத்தால் உக்ரைனில் வாழும் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளை நோக்கி தஞ்சம் அடைந்து வருகிறார்கள். கல்வி, வேலைவாய்ப்புக்காக உக்ரைனுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சென்றிருந்தனர். 

இதில் குறிப்பாக தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் உக்ரைன் பல்கலைக்கழகங்களில் மருத்துவம், என்ஜினீயரிங் படித்து வருகிறார்கள். மெட்ரோ சுரங்கங்களிலும், பதுங்கு குழிகளிலும் பதுங்கி உயிரை கையில் பிடித்துக்கொண்டிருந்த அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. உக்ரைன் வான்பகுதி மூடப்பட்ட நிலையில், அண்டை நாடுகளின் எல்லைக்கு வரவழைத்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. ‘ஆபரேசன் கங்கா’ என்ற பெயரில் இந்த மீட்புப்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

உக்ரைன் மேற்கத்திய நாடுகளுடன் கைகோர்த்துக்கொண்டு ரஷியாவை குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது என்பன உள்ளிட்ட பல பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அந்த நாட்டின் மீது கடந்த மாதம் 24-ந் தேதி ரஷியா போரை தொடங்கியது. தலைநகா் கீவை கைப்பற்றிவிட்டால் உக்ரைனை முழுமையாக ஆக்கிரமித்துவிடலாம் என்கிற எண்ணத்தில் ரஷிய கீவ் நகரை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த தொடங்கியது. ஆனால், அங்கு உக்ரைன் துருப்புகளின் கடுமையான பதிலடி காரணமாக ரஷிய படையினரால் கீவ் நகருக்குள் தொடர்ந்து முன்னேற முடியவில்லை. இதனால் நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது ரஷியா.

மேலும் அந்த வகையில் உக்ரைனின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கிவ், தெற்கு துறைமுக நகரமான மரியுபோல் மற்றும் வடகிழக்கு நகரமான சுமி ஆகிய நகரங்களில் ரஷிய படைகள் பல முனைகளில் இருந்தும் உக்கிரமான தாக்குதல்களை நடத்தி வந்தன. இதனால் அந்த நகரங்களில் சிக்கியிருக்கும் வெளிநாட்டினர் மற்றும் உக்ரேனியர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக சுமி நகரில் 700-க் கும் அதிகமான இந்திய மாணவர்கள் உணவு மற்றும் குடிநீர் இன்றி யுத்த களத்தில் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

இதனால் அவர்கள் சுமி நகரில் இருந்து வெளியேற தேவையான மனிதாபிமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உக்ரைன் மற்றும் ரஷியா என இருதரப்பையும் இந்தியா கேட்டுக்கொண்டது. இந்நிலையில் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் மற்றும் சுமி ஆகிய 4 நகரங்களிலும் போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷியா நேற்று அறிவித்தது. அந்த நகரில் சிக்கியுள்ள பாதுகாப்பாக வெளியேறவும், மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புகளுக்காகவும் மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்துவதாக ரஷியா அறிவித்தது.

இந்தநிலையில், மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில்,  காலை 10 00 மணி முதல் ரஷியா மீண்டும் போர் நிறுத்தத்தை அறிவித்தது. மனிதாபிமான அடிப்படையில் இந்தியர்கள் வெளியேற உதவுவதற்காக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக இந்தியாவில் உள்ள ரஷிய தூதரகம் தெரிவித்துள்ளது. சுமி பகுதியில் உள்ள இந்தியர்கள் வெளியேற உதவ ரஷியாவுக்கு இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.