ரஷிய அதிபர் புதினால் ஒருபோதும் உக்ரைனை வீழ்த்த முடியாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ukraine war

உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ம் தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர். அந்நாட்டின் விமான நிலையம், துறைமுகங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட ராணுவ தளவாட கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாக ரஷியா தெரிவித்தது. உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 14-வது நாளாக நீடித்து வருகிறது. ரஷியாவின் தாக்குதலை எதிர்த்து உக்ரைன் படைகள் தீவிரமான பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் இரு நாட்டு தரப்பிலும் பலர் உயிரிழந்து உள்ளனர். 

இந்நிலையில் உக்ரைன் மீது ரஷியா படையெடுத்த போது, ஓரிரு தினங்களில் அந்நாட்டை ரஷியா கைப்பற்றிவிடும் என்பதே பலரது கணிப்பாக இருந்தது. ஆனால் சுமார் 2 வாரங்கள் ஆன பிறகும் கூட ரஷியாவால் ஓரு சில நகரங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்துள்ளது. ரஷிய வான் படைகள் மற்று தரைப்படைகள் இடையே ஒத்திசைவு இல்லாதது, இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. 

மேலும் தற்போது வரை ரஷிய படைகளை எதிர்த்து உக்ரைன் வலுவாக போரிட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக நேட்டோ படைகளின் உதவி தங்களுக்கு கிடைக்கும் என உக்ரைன் எதிர்பார்த்த நிலையில், அது கிடைக்காமல் போகவே, உக்ரைன் அதிபர் அந்நாட்டு மக்களிடம் ஆயுதம் ஏந்துமாறு அழைப்பு விடுத்திருந்தார். அதனை ஏற்று பொதுமக்கள் பலரும் போர்க்களத்தில் குதித்துள்ளனர். 

ஆனாலும் அதே சமயம் இந்த போரால் உக்ரைன் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலை காரணமாக உலகம் முழுவதும் ரஷியாவுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைனை, ரஷியாவால் ஒரு போதும் வீழ்த்த முடியாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறி உள்ளார். 

இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: “ரஷிய அதிபர் புதினால் உக்ரைனில் ஒரு நகரத்தை கைப்பற்ற முடியும். ஆனால் அவரால் அந்த நாட்டை வீழ்த்த முடியாது. ரஷிய அதிபரால் ஒரு போதும் வெற்றி பெற முடியாது. ரஷியாவின் இந்த தொடர் தாக்குதலால் அந்த நாடு அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் உதவியாக இருக்கும். உக்ரைன் எல்லையில் இருக்கும் அகதிகள் ஐரோப்பிய நாடுகளால் பராமரிக்கப்படுகிறார்கள். இதில் அமெரிக்காவும் பங்கேற்று கொள்ளும். புதினின் இந்த போர் நடவடிக்கையால் பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் பெரிய துன்பம் ஏற்பட்டுள்ளது. தேவையற்ற உயிரிழப்பையும் ஏற்படுத்தி உள்ளது. ஆனால் புதின் தனது கொலைக்கார பாதையில் என்ன விலை கொடுத்தாலும் தொடர்வதில் உறுதியாக இருக்கிறார்.

மேலும் உக்ரைன் மக்கள் தங்கள் நாட்டுக்காக துணிச்சலாக போராடுகிறார்கள். அவர்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்போம். கொடுங்கோல், அடக்கு முறை, வன்முறை மூலம் அடிபணிய செய்யும் செயல்களுக்கு எதிராக நாங்கள் அவர்களை ஆதரிக்கிறோம். இந்த போரின் வரலாற்றை எழுதும் போது உக்ரைன் மீதான புதினின் போர் ரஷியாவை பலவீனமாக காட்டும். மற்ற உலக நாடுகளை வலுவானதாக காட்டும்.” என அமெரிக்கா அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.