புதிதாக அமைய உள்ள “கைலாசா நாட்டில் தங்கத்தில் கரன்சி இருக்கும் என்றும், 56 நாடுகளுடன் வர்த்தகம் நடைபெறும்” என்றும், சாமியார் நித்தியானந்தா அதிரடியாக அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 

சாமியார் நித்தியானந்தா, மீது பாலியல் பலாத்காரம் மற்றும் பெண்களைக் கடத்தியதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் அவர் ஆஜராகாமல் தலைமறைக இருப்பதால், இந்தியாவில் அவருக்கு எதிராக 'புளு கார்னர்' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது அவர் தேடப்பட்டு வரும் நபராக இருக்கிறார். 

எனினும், இந்த கைது நடவடிக்கைப் பெற்றியெல்லாம் கவலைப்படாத சாமியார் நித்தியானந்தா, ஈக்வேடார் அருகே “கைலாசா” என்ற பெயரில் ஒரு தீவை உருவாக்கி, தனி நாடாக உருவாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.  

இந்த நாட்டில் குடியேறுவதற்கு சுமார் 40 லட்சம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நித்தியானந்தா கூறி அடுத்தடுத்து அதிர்ச்சியைக் கிளப்பினார்.
 
இப்படிப்பட்ட சூழல் நிலையில், நித்தியானந்தா வாரம் ஒரு முறை ஆன்லைனில் தனது பக்தர்களுக்குச் சத்சங்கம் நிகழ்ச்சியின் மூலம் சொற்பொழிவு நிகழ்த்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி வந்த சாமியார் நித்தியானந்தா, கடந்த 3 மாத காலமாக எந்த சர்ச்சையிலும் சிக்காமல் அமைதியாக இருந்து வந்த சிலையில், கடந்த 2 வாரங்களாக மீண்டும் புதிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டு, தனது பக்தர்களை இன்ப வெள்ளத்தில் திக்குமுக்காடச் செய்து வருகிறார். 

அதன்படி, கடந்த வாரம் சத்சங்கம் நிகழ்ச்சியின் மூலம் பேசிய சாமியார் நித்தியானந்தா, “கைலாசா நாட்டிற்கு என்று, தனி கரன்சியை உருவாக்கி உள்ளதாகவும், அதற்கென்று புது வங்கியைத் தொடங்க இருப்பதாகவும்” அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டார். 

“எனக்கு நிறைய நன்கொடைகள் வந்திருக்கின்றன என்றும், அவற்றை நல்ல காரியங்களுக்காகச் செலவிடத் திட்டமிட்டேன் என்றும், அதற்காக நமக்கு என்று ஒரு வங்கி தொடங்க உள்ளேன்” என்றும், அறிவித்தார். 

“வாடிகன் வங்கியை மாதிரியாகக் கொண்டு “ரிசர்வ் பேங்க் ஆப் கைலாசா” என்ற புதிய வங்கி மிக விரைவில் உருவாக்கப்பட உள்ளது” என்றும், நம் கைலாசா நாட்டிற்கு என்று சுமார் 300 பக்க பொருளாதார கொள்கையையும் புதிதாக உருவாக்கி உள்ளதாகவும்” அவர் கூறினார். 

“கைலாசா நாட்டிற்கான பணமும் தற்போது வடிவமைக்கப்பட்டு விட்டது” என்று அதிர்ச்சியைக் கிளப்பிய சாமியார் நித்தியானந்தா, “அதில், உள்நாட்டுக்கு ஒரு கரன்சியையும், வெளிநாட்டுக்கு ஒர் கரன்சியையும் அச்சடித்துள்ளோம்” என்றும், அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சியைக் கிளப்பினார்.

“கைலாசா ரிசர்வ் வங்கியானது, சட்டத்தின் படியே தொடங்கப்பட்டு உள்ளது என்றும், சட்டத்துக்குப் புறம்பாக எதுவும் இருக்காது” என்றும் கூறிய நித்தியானந்தா, 
“கைலாசா நாட்டிற்கான கரன்சி பெயர், வடிவமைப்பு ஆகியவை விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட உள்ளேன்” என்றும், தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், “கைலாசா நாட்டின் கரன்சிகள் இப்படி தான் இருக்கும்” என்று வகையில், புதிய அறிவிப்புகளை நேற்று அவர் வெளியிட்டார்.

அதன்படி, “56 நாடுகளுடன் வர்த்தகம் செய்யப்படும் என்றும், இந்த 56 நாடுகளில் தற்போது எது போன்ற ஒரு விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறதோ, அந்த நடவடிக்கை கைலாசாவில் அப்படியே இருக்கும்” என்றும், சாமியார் நித்தியானந்தா கூறியுள்ளார்.

“மலேசியா, ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய பல்வேறு நாடுகளை அவர் இந்து நாடு என்றும் குறிப்பிட்டு உள்ளதோடு, இவையெல்லாம் அடங்கியவை அகண்ட பாரதம் என்று, சாமியார் நித்தியானந்தா சுட்டிக்காட்டி உள்ளார். 

“இந்த 56 நாடுகளுடன் கைலாசாவுக்கு வர்த்தக தொடர்பு இருக்கும்” என்றும், அவர் கூறி உள்ளார்.

“கைலாசத்தின் ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் என அனைத்தும் தங்கத்தில் இருக்கும் என்றும், தங்கம் என்பது ஒரு உலோக மட்டும் கிடையாது என்றும், அது புனிதம் வாய்ந்தது என்றும் நித்தியானந்தா குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, “கைலாசாவின் கரன்சிகள் அனைத்தும் தங்கத்திலேயே அச்சடிக்கப்படும் என்றும், இந்த கரன்சிகள் சமஸ்கிருதத்தில் சொர்ண முத்ரா என்று அழைக்கப்படும் என்றும், தமிழில் பொற்காசு என்றும், ஆங்கிலத்தில் டாலர் என்றும் அழைக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “புதிய கரன்சிகள் அனைத்தும் 1 காசு, 2 காசு, 3 காசு, 4 காசு, 5 காசு என மதிப்பீடுகளைக் கொண்டு அச்சடிக்கப்படும் என்றும், ஒரு டாலரில் 1.66 கிராம் தங்கம் இருக்கும் என்றும், வேதம் மற்றும் ஆகம விதிகளைப் பின்பற்றியே கைலாசாவின் பொருளாதாரக் கொள்கைகள் அமைந்திருக்கும்” என்றும், விநாயகர் சதுர்த்தி அன்று இதெல்லாம் அறிமுகம் செய்யப்படும் என்றும், சாமியார் நித்தியானந்தா அறிவித்துள்ளார்.