இந்தியா - ரஷியா இடையேயான கூட்டணி வளர்ந்து வருகிறது அது தான் எங்களுக்கு முக்கியம் என்று ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷியா 37-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. இந்த போர் உலக நாடுகளின் அரசியலில் பெரும் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது. மேற்கத்திய நாடுகள், ஆசிய நாடுகள், வளைகுடா நாடுகள் என பல்வேறு நாடுகளும் இந்த போரில் தங்கள் நிலைப்பாட்டை கவனமாக கையாண்டு வருகின்றன.

மேலும் இந்த ரஷ்யா- உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகள் மிகவும் கூர்மையாக கண்காணித்து வருகின்றன. இந்த போரில் இந்தியாவை தங்கள் பக்கம் கொண்டு வர அமெரிக்கா, மேற்கத்திய நாடுகளும் மற்றும் ரஷியாவும் முயற்சித்து வருகின்றன. பல்வேறு நாடுகளில் தூதர்கள், வெளியுறவுத்துறை மந்திரிகள் இந்தியாவுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் இரண்டு நாள் பயணமாக நேற்று இரவு இந்தியாவுக்கு வந்துள்ளார். ரஷிய வெளியுறவுத்துறையின் இந்த வருகை உலக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது. இந்நிலையில், இந்தியா வந்துள்ள ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை இன்று சந்தித்தார். இரு நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகளும் உக்ரைன் விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து இரு நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி கூறுகையில், தற்போதைய நாட்களில் நமது மேற்கத்திய நாடுகள் எந்த விதமான சர்வதேச பிரச்சினை வந்தாலும் அதை உக்ரைன் விவகாரமாக சுருக்குகின்றன. நாங்கள் எதற்கும் சண்டையிடப்போவதில்லை. இந்தியா இந்த சூழ்நிலையை ஒருதலைப்பட்சமாக மட்டும் எடுத்துக்கொள்ளவில்லை என்பதை நாங்கள் பாராட்டுகிறோம்.

மேலும் இந்தியா - ரஷியா இடையேயான கூட்டணி வளர்ந்து வருகிறது. அது தான் எங்களுக்கு முக்கியம். உலக அமைப்பை சமநிலையில் வைத்திருப்பதில் நாங்கள் கவனமாக உள்ளோம். நாங்கள் இருநாட்டு உறவையும் மேலும் வலுப்படுத்தியுள்ளோம். எங்கள் அதிபர் புதின், மற்றும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார் என்று தெரிவித்தார்.