பாகிஸ்தானில் ஒரு கர்ப்பிணிப் பெண் ஒரு போலி துறவி ஒருவரின் பேச்சை கேட்டு தன் தலையில் தானே ஆணி அடித்து கொண்டுள்ளார்.

fake godman

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் வடமேற்கு பெஷாவர் நகரில் உள்ள லேடி ரீடிங் மருத்துவமனையில் ஒரு கர்ப்பிணி பெண் தலையில் ஆணியுடன்  அனுமதிக்கப்பட்டார். அந்த பெண்ணின் புகைப்படங்கள் சோஷியல் மீடியாக்களில் வைரலானதை அடுத்து பெஷாவர் காவல்துறை இந்த விஷயத்தை கையில் எடுத்தது விசாரித்தது.

இந்நிலையில் பெஷாவர் காவல்துறையின் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப்பாஸ் அஹ்சன் இது தொடர்பாக செய்துள்ள டுவிட்டில் "ஆண் குழந்தை  வேண்டும் என்றால் தலையில் ஆணி அறைந்து கொள் என்று கூறிய ஒரு போலி துறவியின் பேச்சை நம்பி  அப்பாவி பெண் தலையில் ஆணீ அடித்து உள்ளார்.  அந்த போலி துறவியைசட்டத்தின் முன் நிறுத்த சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து சிகிச்சை அளித்த டாக்டர்  ஏன் போலீசில் புகார் செய்யவில்லை என்பதையும் குழு விசாரிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண் ஏற்கனவே 3 பெண் குழந்தைகளின் தாய் என்றும், நான்காவதாகவும் பெண் குழந்தையை பெற்றெடுத்தால் கைவிட்டு விடுவேன் என கணவர் மிரட்டியதால் அந்த பெண் போலி துறவியின் பேச்சை நம்பி ஆணி அடித்து கொண்டுள்ளதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து கணவனின் மிரட்டலை அடுத்து தன்னை கடவுள் போல காட்டி கொண்ட போலி ஆசாமியிடம் சென்ற அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஒரு தாயத்து, ஓத வேண்டிய பொருட்கள் மற்றும் ஆணி ஆகியவற்றை கொடுத்தார். பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்குச் சென்று அந்த போலி துறவி கூறியது போல தன் தலையில் ஆணியை அடித்து கொண்டுள்ளார். இதனால் அவர் வலியால் அலற தொடங்கியதை கண்ட அவரது குடும்பத்தினர்  உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது மண்டையிலிருந்து ஆணியை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக உள்ளூர் ஊடக செய்திகள்  தெரிவிக்கின்றன. போலி துறவி கொடுத்த இரண்டு அங்குல ஆணி பெண்ணின் நெற்றியின் மேல் துளைத்திருந்தது. ஆனால் அது மூளைக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது எக்ஸ்ரே மூலம் தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.