இந்தோனேசியாவில் 300 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரமான வழக்கில் கைது செய்யப்பட்ட பிரான்ஸ் நாட்டுக்காரர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 65 வயதான பிராங்கோயிஸ் கமிலி அபல்லோ, கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாகத் தென் கிழக்கு ஆசிய நாட்டிற்குச் சுற்றுலா விசாவில் பல முறை சென்று வந்திருக்கிறார். 

அந்த சுற்றுலாவின் போது, இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்த பிராங்கோயிஸ் கமிலி அபல்லோவை, கடந்த மாதம் அந்நாட்டு போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். 

பிராங்கோயிஸின் கைதின் போது, அந்த நேரத்தில் அவர் ரூமில் இருந்த 2 சிறுமிகளையும் போலீசார் மீட்டனர். இதையடுத்து, அவரது அறையிலிருந்த அவருக்குச் சொந்தமான லேப் டாப் மற்றும் அவரது செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, பிராங்கோயிஸிடம் அந்நாட்டு போலீசார் நடத்திய விசாரணையில், “இந்தோனேசியாவில் மட்டும் சுமார் 300 க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளை அவர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. அத்துடன், அது தொடர்பான அதரங்கள் அவருடைய லேப் டாப் மற்றும் அவரது செல்போனில் இருந்ததையும் அந்நாட்டு போலீசார் அதிரடியாக கண்டுப்படித்துள்ளனர்.

குறிப்பாக, பிராங்கோயிஸ் லேப் டாப்பில் சுமார் 10 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்ட 100 க்கணக்கான பெண் குழந்தைகளுடன் பாலியல் வன்கொடுமையில் அவர் ஈடுபட்டு இருந்த வீடியோவும் ஏராளமாக இருந்தது. 

அந்த வீடியோவில் பிராங்கோயிஸ் உடன் நெருக்கமாக இருக்க மறுத்தவர்களை, அவர் அடித்து துன்புறுத்துவன வீடியோவும் இருந்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அப்படி, தன்னுடன் நெருக்கமாக இருக்க ஒப்புக் கொள்ளாத பெண் குழந்தைகளை அவர் அடித்து உதைத்துத் துன்புறுத்தி வந்திருக்கிறார். பல ஆண்டுகளாக பிராங்கோயிஸ் இந்தோனேசியக் குழந்தைகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி உள்ளதாகவும், இதில் உயிர் இழந்தவர்களும் இருக்கலாம் என்றும், போலீசார் தரப்பில் கூறப்பட்டது. 

அத்துடன், “குழந்தைகளை அணுகி அவர்களிடம் ஆசை ஆசையாகப் பேசும் பிராங்கோயிஸ், அவர்களுக்குப் பிடித்த பொருட்களை வாங்கித் தந்து, அவர்களைக் கவர்ந்திழுப்பார் என்றும், குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்தே, குழந்தைகளை அவர் தன் வலையில் வீழ்த்தி உள்ளார் என்றும், அந்நாட்டின் ஜகார்த்தா காவல் துறைத் தலைவர் நானா சுட்ஜானா தெரிவித்துள்ளார். 

மேலும், “தன்னுடன் நெருக்கமாக இருக்க ஒப்புக் கொண்டவர்களுக்கு சுமார் 250,000 ரூபாய் முதல் முதல் ஒரு மில்லியன் ரூபாய் வரை, அவர் பணம் கொடுத்து வந்திருப்பதாகவும்” போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதாவது, 17 டாலர் முதல், 20 டாலர் வரை, அவர் சம்மந்தப்பட்டவர்களுக்கு ஆட்களுக்குத் தகுந்தார் போல், சம்பளமாகக் கொடுத்து வந்திருக்கிறார்” என்பதும், போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பெண் குழந்தைகளிடம் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ஏராளமான வீடியோக்கள் ஆதாரமாக இருப்பதால், பிராங்கோயிஸ்க்கு அதிக பட்சமாக மரண தண்டனை வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அந்நாட்டு போலீசார் தெரிவித்திருந்தனர். 

அதே போல், இந்தோனேசியாவின் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டப் படி, பிராங்கோயிஸ்க்கு ஆயுள் தண்டனை அல்லது துப்பாக்கிச் சூடு மூலம் மரண தண்டனை நிறைவேற்றப் படலாம் என்றும், அந்நாட்டு ஊடகங்கள் கூறியது.

இதனைத் தொடர்ந்து, பிராங்கோயிஸ் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரிடம் அந்நாட்டு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனால், “பிராங்கோயிஸ் தற்கொலை செய்ய முடிவு செய்ததாகவும், அதன்படி அவர் கழுத்தில் கேபிள் ஒன்றை அழுத்திப் பிடித்து, மூச்சுத் திணறி உயிரிழக்கும் வகையில் முயன்றுள்ளார்” என்றும், அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, “ சிறையிலிருந்த போலீசார் அவரை மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதித்தனர் என்றும், தொடர்ந்து 3 நாட்கள் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் உயிரிழந்து உள்ளார்” என்றும், அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இந்தோனேசியா நாட்டில் ஆண்டு தோறும் சுமார் 70 ஆயிரம் பெண் குழந்தைகள் பாலியல் ரீதியான வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர் என்று, உலகளாவிய கடத்தல் தடுப்பு மையம் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.