பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் 58.6 சதவீத வாக்குகள் பெற்று இம்மானுவேல் மேக்ரான் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்

பிரான்ஸ் அதிபர் பதவிக்கு ஏப்ரல் 10-ம் தேதி முதற்கட்டத் தேர்தல் நடைபெற்றட்து. இதில் 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் யாரும் 50 விழுக்காடு வாக்குகளைப் பெறாததால் அதில் முதல் இரு இடங்களைப் பிடித்த இம்மானுவேல் மேக்ரான் மற்றும் மரின் லீ பென் ஆகியோரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க ஏப்ரல் 24ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் 58 புள்ளி 6 விழுக்காடு வாக்குகளுடன் இம்மானுவேல் மேக்ரான் தொடர்ந்து இரண்டாவது முறையாக அதிபராகத் தேர்வாகியுள்ளார்.  

வலதுசாரி வேட்பாளரான மரின் லீ பென் 41 புள்ளி 4 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார். கடந்த இருபதாண்டுகளில் இரண்டாவது முறையாக அதிபர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆள் என்கிற பெருமையை மேக்ரான் பெற்றுள்ளார். மேக்ரானின் வெற்றியை அடுத்து அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் லீ பென்னுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருப்பது தீவிர வலதுசாரிகள் அதிகாரத்தைக் கைப்பற்றும் அளவில் மிக நெருக்கமாக இருப்பதையும், நாடு கொள்கை அளவில் பிளவுபட்டிருப்பதையும் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். 2017ஆம் ஆண்டுத் தேர்தலிலும் மேக்ரானும் லீபென்னும் களத்தில் இருந்தனர். அப்போது மேக்ரான் 66 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருந்தார். தற்போது அதைவிட வாக்கு விழுக்காடு குறைந்துள்ளது. மரின் லீ பென் மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். பிரான்சு அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இம்மானுவேல் மேக்ரானுக்குப் பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.