போர் பதற்றம் நிலவுவதால் இந்தியர்கள் முன் அறிவிப்பு இன்றி எல்லைக்கு செல்ல வேண்டாம் என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

indian embassy

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன், நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் ஒன்றரை லட்சம் படை வீரர்களை குவித்தது. உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் இல்லை என கூறிய ரஷியா, பெலாரஸ் நாட்டு ராணுவத்துடன் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவதற்காகவே படைகளை குவித்து வருகிறோம் என தெரிவித்தது. அதே வேளையில் உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் பிரிவினைவாதிகளை தூண்டிவிட்டு, அவர்கள் மூலம் உக்ரைனுக்குள் ஊடுருவதற்கான வேலைகளை ரஷியா செய்தது.

உக்ரைனின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லை பகுதிகளில் ரஷிய கூட்டமைப்பு ஏவுகணைகளை பொழிந்து வருகின்றன.  இதனால், லுஹான்ஸ்க், சுமி, கார்கிவ், செர்னிஹிவ் மற்றும் ஜைட்டோமைர் பகுதிகளில் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இந்த தாக்குதல்கள் எல்லை பிரிவுகள், எல்லையில் ரோந்து பகுதிகள் மற்றும் சோதனை சாவடி பகுதிகளில் நடத்தப்படுகின்றன.  இதற்காக ரஷியா, சிறிய வகை பீரங்கிகள், கனரக மற்றும் சிறிய ஆயுதங்களை கொண்டு தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது.  ரஷியாவின் கிரீமியா சுயாட்சி பகுதியில் இருந்தும் தாக்குதல் நடத்தப்படுகிறது என உக்ரைன் தெரிவித்து உள்ளது.

உக்ரைனில் உள்ள ராணுவ தளங்கள், விமான தளங்கள் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் மீதான போரை ரஷிய நிறுத்த உலக நாடுகள் உதவ வேண்டும் என உக்ரைன் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.  உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என  ரஷியாவுக்கு ஜெர்மனி வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இந்நிலையில் உக்ரைன் நாட்டின் மீது நேற்று ரஷியா போர் தொடுத்தது. சரமாரி குண்டு வீச்சு, ஏவுகணை தாக்குதல் காரணமாக உக்ரைன் நிலைகுலைந்து போய் உள்ளது.  உலகத்தின் ஒட்டுமொத்த பார்வையும், ஒரே நாளில் உக்ரைன் நாட்டின் மீது திரும்பி இருக்கிறது. நேற்றைய தாக்குதல்களில் உக்ரைன் படைவீரர்கள், பொதுமக்கள் என 68 பேர் பலியானதாக உக்ரைன் அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் ஒன்று கூறியது. ஆனால் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் மீது நேற்று முன் தினம் ரஷியா போர் தொடுத்தது. உக்ரைன் எல்லைக்குள் குண்டு மழை பொழிந்த ரஷிய படைகள், வேகமாக முன்னேறிச்சென்றன.  ஒரு பக்கம் ஏவுணை வீச்சும், மறுபக்கம் குண்டுமழையும் பொழிந்ததால் உக்ரைன் நாட்டின் பல நகரங்கள் முதல்நாள் போரிலேயே உருக்குலைந்து போயின. தொடர்ந்து 3-வது நாளாக உக்ரைன் மீது ரஷியா முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் உக்ரைன் - ரஷியா போரால், உக்ரைனில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் ஆவர். உக்ரைன் தனது வான்பகுதியை மூடிவிட்டதால், அங்கு மீட்பு விமானங்கள் செல்ல முடியாதநிலை நிலவுகிறது. இதை கருத்தில்கொண்டு மத்திய வெளியுறவு அமைச்சகமும், உக்ரைனில் உள்ள இந்திய தூதரகமும் மாற்று ஏற்பாடுகளை வகுத்து வருகின்றன.அதன்படி, உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி, போலந்து, சுலோவாகியா ஆகிய நாடுகளுடனான எல்லை பகுதியில் இந்திய தூதரகம் சோதனை முகாம்களை அமைத்துள்ளது.

மேலும் இதனால் முன் அறிவிப்பு இன்றி எல்லைப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என  உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. தூதரக அதிகாரிகள், தூதரக அவசர தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள வேண்டும் என உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. 

அதனைத்தொடர்ந்து  உக்ரைனின் மேற்கு பகுதிகளில் உள்ள நகரங்களில் இருப்பது எல்லையை நோக்கி செல்வதை விட பாதுகாப்பானது. எனவே, உக்ரைனின் கிழக்குப் பகுதியில் இருப்பவர்கள்  மறு அறிவிப்பு வரும் வரை தங்கள் குடியிருப்புகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. தேவையின்றி வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.