தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் அக்கட்சியின் தலைமை கழகம் அறிவித்துள்ளது.   

அண்டை நாடான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கிறது. அந்த நாட்டில் அன்னியச்செலாவணி கையிருப்பு கரைந்துபோனதால் இறக்குமதி பாதித்துள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலை விஷம் போல ஏறி வருகிறது. எரிப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்துக்கிடக்கின்றனர்.

இந்த பொருளாதார நெருக்கடி,  தினமும் 13 மணி நேரம் வரையில் மின்வெட்டு உள்ளது. இது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா பல்வேறு உதவிகளை செய்துள்ள நிலையில், சர்வதேச நிதியம் ஐ.எம்.எப்.பின் உதவியை இலங்கை அரசு நாடி நிற்கிறது. 

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கொழும்பு நகரில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகை முன் ஏறத்தாழ 5 ஆயிரம் பேர் திரண்டனர். பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க தவறியதற்காக அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று கோஷங்கள் முழங்கி போராட்டம் நடத்தினர்.

மேலும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் போராட்டங்கள்  தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார் அதிபர் கோத்பய ராஜபக்சே. இந்நிலையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் படும் இன்னல்களைச் சுட்டிக்காட்டி  அந்நாட்டு அமைச்சர் ரோஷன் ரணசிங்கே பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.  

அன்றாட தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடும் உயர்ந்திருக்கிறது. காகிதம் இல்லாததால் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கூட நடத்த முடியாத அளவிற்கு நிலைமை மோசமாகியிருக்கிறது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் கிடைக்காததால் போக்குவரத்துக்கு ஸ்தம்பித்துள்ளது.

இந்நிலையில் நிதி நெருக்கடையை சமாளிக்க சீனாவிடம் கடன் வாங்கிய இலங்கை பின்னர் அந்த கடனை கட்ட முடியாமல் சிக்கித்தவித்தது. மேலும், விவசாயத்திற்கு இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதனால் இலங்கையில் உணவு, எரிபொருள் தட்டுப்பாடுடன், தினசரி பல மணி நேர மின்வெட்டும் நீடிக்கிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்துவருவதால் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனைத்தொடர்ந்து  போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் நேற்று இலங்கை அமைச்சரவையில் இருந்து பிரதமர் மகிந்தா ராஜபக்சே தவிர எஞ்சிய அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்தனர். இதனை தொடர்ந்து 4 புதிய அமைச்சர்களை  அதிபர் கோட்டபயா ராஜபக்சே நியமித்தார்.  ஆனால், அதிபர் கோட்டபயா, பிரதமர் மகிந்தா என அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மக்கள், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.

அதனைத்தொடர்ந்து இந்தியா கடனுதவி ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை அரசின் வர்த்தக கழகத்திற்கு அரிசி அனுப்பி வைக்கும், பட்டாபி அக்ரோ ஃபுட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் பி.வி.கிருஷ்ண ராவ் இது குறித்துப் பேசுகையில், “நாட்டின் தெற்குப் பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் இருந்து அரிசி ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. வெகு எளிதாக மாற்றம் செய்யக் கூடிய கண்டெய்னர்களில் முதலில் அரிசியை நிரப்பி வருகிறோம்’’ என்று தெரிவித்தார். தற்போதைய சூழலில், இலங்கைக்கு வெகு விரைவாக அரிசி ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு இந்தியாவுக்கு மட்டுமே உள்ளது என்றும், பிற நாடுகள் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றால் வாரக் கணக்கில் ஆகும் என்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள், ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல் விலையும் வாங்க முடியாத விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் இலங்கை மக்கள்  தவித்து வருகின்றனர். இதனால் வேறு நாட்டிற்கு சென்று உயிர் பிழைத்துக்கொள்ளலாம் என நினைத்து பாஸ்போர்ட் அலுவலகத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையில் காத்துள்ளனர். அதே நேரத்தில் இலங்கையில் உள்ள தமிழர்கள் படகுகள் மூலம் அகதிகளாக தமிழகம் வர தொடங்கியுள்ளனர். இன்று மட்டும் 19 பேர் இலங்கையில் இருந்து படகுகள் மூலம் தனுஷ்கோடி வந்தடைந்தனர். தங்களுக்கு உண்ண உணவும், குழந்தைகளுக்கு பால் பொருட்களும் கிடைக்கவில்லையென்று வேதனை தெரிவித்தவர்கள், தமிழகத்தை நம்பித்தான் கைக்குழந்தைகளோடு வந்துள்ளதாக தெரிவித்தனர்.

இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.  அந்த அறிக்கையில், இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்து இருந்தேன். இதற்கான ஒன்றிய அரசின் அனுமதியும் தற்போது கிடைத்துள்ளது. இதன் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன. இந்த சூழ்நிலையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவியினை செய்ய வேண்டிய தருணம் இது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது. 

மேலும் அதனைத்தொடர்ந்து தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் அக்கட்சியின் தலைமை கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இலங்கை மக்களுக்கு உதவிட முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் இத்துடன், திராவிட முன்னேற்றக் கழகச் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 3-5-2022 அன்று வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், தி.மு.க. சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, தி.மு.கழகத்தின் பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்கள் ஒரு மாத ஊதியத்தை “முதலமைச்சர் பொது நிவாரண நிதி”க்கு வழங்கிடுவர் என்று தெரிவிக்கப்பட்டது.