இங்கிலாந்து ஆஸ்பத்திரிகளில் கொரோனா பரவலால் எழுந்துள்ள ஆள் பற்றாக்குறையை சமாளிக்க ராணுவ டாக்டர்களும், பணியாளர்களும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

corono

இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நேற்று முன்தினம் காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அங்கு 1 லட்சத்து 79 ஆயிரத்து 756 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 231 பேர் தொற்று பாதிப்பால் இறந்துள்ளனர்.

மேலும் அங்கு கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 1 கோடியே 40 லட்சத்து 15 ஆயிரத்து 65 ஆக உயர்ந்தது. பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 49 ஆயிரத்து 515 ஆக அதிகரித்து இருக்கிறது. 17 ஆயிரத்து 988 பேர் சிகிச்சையில் இருந்தனர். ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் சேர்க்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் லண்டனில் என்.எச்.எஸ். ஆஸ்பத்திரிகளில் அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து முழுவதும் பல ஆஸ்பத்திரிகளும் பணியாளர் பற்றாக்குறை நெருக்கடி ஏற்பட்டு, அறுவை சிகிச்சைகள் ஒத்தி போடப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதும் தனிமைபடுத்தப்பட்டிருப்பதும் அதிகரித்து இருப்பதே இதற்கு காரணம் ஆகும்.

மேலும் லண்டன் ஆஸ்பத்திரிகள் ஒவ்வொன்றிலும் கடந்த மாதம் தலா 1,100 பேர்தான் சிகிச்சை பெற்றனர். தற்போது இது 4 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக என்.எச்.எஸ். ஆஸ்பத்திரிகளில் 200 ராணுவ வீரர்கள் பணிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களில் 40 பேர் ராணுவ டாக்டர்கள் ஆவார்கள். 160 பேர் பணியாளர்கள் ஆவார்கள். இவர்கள் 3 வார காலம் பணியாற்றுவார்கள். இதுபற்றி ராயல் நர்சிங் கல்லூரி இயக்குனர் பேட்ரிசியா மார்குயிஸ் கூறும்போது பணியாளர் நெருக்கடி இருப்பதை அரசாங்கத்தால் மறுக்க முடியாது என்பதைத்தான் ராணுவத்தினரை பணிக்கு அனுப்பி இருப்பது காட்டுகிறது என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து  ராணுவ மந்திரி பென் வாலஸ் கூறும்போது நாட்டை கொரோனா தொற்றில் இருந்து காப்பாற்றுவதற்கு என்.எச்.எஸ். ஆஸ்பத்திரிகளில் அர்ப்பணிக்கப்பட்ட தங்கள் சகாக்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு நமது பாதுகாப்பு படைகளில் உள்ள ஆண்களும், பெண்களும் மீண்டும் செல்கிறார்கள் என குறிப்பிட்டார்.

மேலும் பிரிட்டிஷ் மருத்துவ கவுன்சில் தலைவர் சாந்த் நாக்பால் இதற்கு முன்னர் ஆஸ்பத்திரிகளில் இந்த அளவுக்கு பணியாளர்கள் பணிக்கு வராமல் இருந்ததை நாங்கள் பார்த்தது இல்லை. இது இயல்பானது அல்ல. என்.எச்.எஸ். மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறது என்பதை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். இத்தகைய அழுத்தத்தாலும் பணியாளர்கள் பற்றாக்குறையாலும் ஏற்படுகிற விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ள ஆயிரக்கணக்கான நோயாளிகள் கவலைக்குள்ளாகிற சூழல் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.