பாகிஸ்தானில், மூன்று முறை பிரதமராக இருந்தவர் நவாஸ் ஷெரீப், 70. இவருக்கு, கடந்த, 2018 ஜூலை மாதம், ஊழல் வழக்கில், ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன், அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் மருமகன் முகமது சப்தாரும், சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே கடந்த ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி நவாஸ் ஷெரீப்புக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு என கருதி சிறையில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்தது. அதனைத் தொடர்ந்து நவாஸ் ஷெரீப் லண்டனில் சிகிச்சை பெறுவதற்காக பாகிஸ்தான் கோர்ட்டு அவருக்கு 8 வாரங்களுக்கு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து நவம்பரில் நவாஸ் ஷெரீப் லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றார்.

அதன் பிறகு டிசம்பர் 23-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் நவாஸ் ஷெரீப்புக்கு மேலும் 4 வாரம் ஜாமீன் நீட்டிக்கப்பட்டது. அதே சமயம் இனியும் மேற்கொண்டு ஜாமீனை நீட்டிக்க வேண்டுமானால் நவாஸ் ஷெரீப்பின் மருத்துவ அறிக்கைகளை பஞ்சாப் மாகாண அரசிடம் சமர்ப்பிக்க வேண்டுமென லாகூர் ஐகோர்ட்டு தெரிவித்தது.

ஆனால் மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யாத நவாஸ் ஷெரீப் தரப்பு, அவரது உடல்நிலை குறித்த மருத்துவ சான்றிதழை மட்டும் தாக்கல் செய்தது. இதை ஏற்றுக்கொள்ள, மருத்துவ வாரியம் மறுத்தது. இதனிடையே நவாஸ் ஷெரீப் லண்டன் வீதிகளில் சகஜமாக உலாவரும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. அதனைத் தொடர்ந்து பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு நவாஸ் ஷெரீப்பை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தது.

இந்த நிலையில் நவாஸ் ஷெரீப்பை நாடு கடத்த இங்கிலாந்து அரசிடம் முறைப்படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்தது. இந்த தகவலை பாகிஸ்தானின் தேசிய பொறுப்புடைமை மற்றும் உள்துறை விவகாரங்களுக்கான பிரதமரின் சிறப்பு ஆலோசகர் ஷாஜாத் அக்பர் கூறினார். லாகூரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது இது பற்றி அவர், ``பாகிஸ்தான் அரசு அவரை (நவாஸ் ஷெரீப்) ஒரு தலைமறைவு குற்றவாளியாக கருதுகிறது. எனவே அவரை ஒப்படைக்குமாறு இங்கிலாந்து அரசுக்கு முறைப்படி கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான இந்த நடவடிக்கையை தனிப்பட்ட தாக்குதலாக பார்க்கக்கூடாது. நவாஸ் ஷெரீப் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். அவர் லண்டன் வீதிகளில் உலா வருவது பாகிஸ்தான் நீதித்துறையின் முகத்தில் விழுந்த ஒரு அறை. அரசாங்கத்தால் இதை அனுமதிக்க முடியாது. இதில் தனிப்பட்ட முறையில் எதுவும் இல்லை. நாங்கள் சட்டத்தை செயல்படுத்த மற்றும் அதன் தேவைகளை பூர்த்தி செய்ய மட்டுமே முயற்சிக்கிறோம். நவாஸ் ஷெரீப் நாடு கடத்தப்படுவதை விரைவுபடுத்த தேசிய பொறுப்புடமை முகமையை பாகிஸ்தான் அரசு அணுகும்"

என்றார் அவர்.

எனினும் அவர் பாகிஸ்தானுக்கு இன்னமும் திரும்பவில்லை என்பதால், வருகின்ற 22ம் தேதி, நவாஸ் ஷெரீப்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என, பாக்., வெளியுறவுத் துறை செயலரிடம், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தின் உதவி பதிவாளர், உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்கக்கோரி, நவாஸ் ஷெரீப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், நவாஸ் ஷெரீப்பிற்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பித்தது. அதை, பாக்., அரசு, லண்டனில் உள்ள பாக்., துாதரகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. இதில், சட்ட ரீதியிலான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, துாதரக வட்டாரங்கள் தெரிவித்தன.