தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியான கோவாக்சினை செலுத்திக்கொண்டார். முன்னதாக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். 


தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், "மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கில் தடுப்பூசியை எடுத்துக்கொண்டேன். தமிழகத்தில் 907 பேர் மட்டுமே கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக்கொண்டு உள்ளதால்,  908- வது நபராக நான் போட்டுக்கொண்டேன். கொரோனா தடுப்பூசி குறித்து எந்த தயக்கமும், அச்சமும் மக்களுக்கு வேண்டாம். தடுப்பூசி குறித்து வதந்திகளை பரப்பாதீர்கள். 


மேலும்  குழந்தைகள், மாணவர்கள் அதிகமாக கொரோனா தொற்றில் பாதிப்படையவில்லை. அதே போல் பெண்களும் இந்த தொற்றில் குறைவான அளவில் தான் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.