தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட பின் சென்னை திரும்பிய அவர், கடந்த சில மாதங்களாக வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்த விஜயகாந்த், தேமுதிகவின் 14-வது ஆண்டு விழாவையொட்டி கடந்த 14-ஆம் தேதி தேமுதிக கட்சி அலுவலகத்தில் கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

மேலும், ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியது.

இந்த தகவல் விஜயகாந்த்தின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தியது. அதிலும் இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், விஜயகாந்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற தகவலால் தேமுதிக கட்சி நிர்வாகிகளுக்கிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து விஜயகாந்துக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மாற்றும் அவரது இரண்டு மகன்களுக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர்களுக்கு கொரோனா இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. 

இதுகுறித்து தேமுதிக கட்சித் தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், ``கழக தலைவர் கேப்டன் அவர்கள் வழக்கமாக 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக கேப்டன் விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் சென்னை மியாட் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற கேப்டன் விஜயகாந்த்துக்கு, லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது. இருப்பினும், உடனடியாக அது சரி செய்யப்பட்டுவிட்டது. தற்போது பூரண உடல் நடத்துடன் கேப்டன் விஜயகாந்த் உள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 

``தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா பரிசோதனையில் கடந்த 22 ஆம் தேதி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. அவர் கூடிய விரைவில் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, நேற்றைய தினம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை (இன்று - செப் 28) வீடு திரும்புவார் என்று தேமுதிக துணைச் செயலாளர் சு சுதிஷ் தெரிவித்தார். இதனால், தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

ஆனால், அவர்களுக்கு மேலும் சோகத்தை தரும் விதமாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளிவந்திருக்கிறது. இதனையடுத்து அவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு லேசான அறிகுறியுடனான கொரோனா பாதிப்பு இருந்தது. இதனால் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கொரோனா பாதிப்பில் இருந்து விஜயகாந்த் குணமடைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே விஜயகாந்த் வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், வீட்டில் உள்ள யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வந்தது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்துடன், பிரேமலதா உடன் இருந்து கவனித்து வந்தார். இந்த நிலையில் குடும்பத்தில் உள்ளவர்கள் மீண்டும் பரிசோதனை செய்தனர்.

அப்போது, விஜயகாந்த் மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்திற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து உடனடியாக மியாட் மருத்துமவனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேமுதிக கட்சி நிகழ்ச்சிகள் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பிரேமலதா தான் தலைமையேற்று நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.