இந்த நாள் அஜித்தின் வாழ்வில் மிக முக்கியமான நாள் ! காரணம்....
By Sakthi Priyan | Galatta | April 24, 2019 11:00 AM IST
அஜித்-ஷாலினி காதல் ஜோடியின் கல்யாண நாள் இன்று. சரியாக 19 ஆண்டுகளுக்கு முன்னால் 24 ஏப்ரல் 2000 அன்று இந்த ஜோடி மணமக்களாய் நின்ற போது வாழத்தாத உள்ளங்கள் இருந்திருக்க இயலாது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா என திரை மற்றும் அரசியல் பிரபலங்கள் அனைவரும் வந்து வாழ்த்தினர்.
சரியாக குறிப்பிட வேண்டுமானால், சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீனிவாசா திரையரங்கத்தில் அமர்க்களம் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. இங்கு தான் தல அஜித்திற்கும் ஷாலினிக்கும் லேசான காதல் மலர்ந்த தருணம்.
அமர்க்களம் படப்பிடிப்பில் கத்தியை ஆக்கிரோஷமாக தூக்கி எறிவது போன்ற ஒரு காட்சி எடுத்துக்கொண்டிருந்த போது, அந்த கத்தி லேசாக திசை மாறி ஷாலினியின் கையில் பட்டதாம். உடனே ஷூட்டிங் நிறுத்தப்பட்டு சிறிய மருத்துவமனையையே கொண்டு வந்து நிறுத்தினராம் அஜித். பிறருக்கு உதவும் இந்த குணம் ஷாலினியின் மனதில் பட தல அஜித்தை பிடித்துபோனதாம்.
எதையும் வெளிப்படையாக பேசி பழகும் அஜித், தனது காதலையும் வெளிப்படையாக ஷாலினியிடம் கூறியிருக்கிறார். பின்னர் வீட்டுக்கு வந்து அப்பா கிட்ட பேசுங்க என்று ஷாலினி சொன்னவுடன் அஜித்திற்கு அப்படி ஒரு சந்தோஷமாம். இருக்காதா.. பிடித்த வாழ்க்கை துணைவி வரப்போகும் நேரம் அல்லவா.. இச்செய்தி அறிந்த ரசிகர்களும் கொண்டாட துவங்கினர்.
அஜித்திற்கு எப்படி ரேசிங்கோ, ஷாலினிக்கு பேட்மிட்டன். ஷாலினி விளையாடும் எந்தவொரு போட்டியையும் அஜித் கண்டுகளிக்க தவறியதில்லை. கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கவேண்டும் என்பதற்கு இதைவிட உதாரணம் தேவையா ?
இன்று வரை அஜித்தின் வாழ்க்கையில் பக்கபலமாக இருக்கிறார் ஷாலினி. அஜித் இன்று இவ்வளவு சாதனை செய்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் திருமதி அஜித்தான ஷாலினி தான். இந்த பொன்னான வாழ்விற்க்கு சான்றாகவும் அஜித்-ஷாலினியின் அழகான உலகமாய் விளங்குகின்றனர் மகள் அனுஷ்கா மற்றும் மகன் ஆத்விக்.
இந்த பொன்னான தினத்தை அஜித்-ஷாலினி ரசிகர்களுடன் கொண்டாடுவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா.