மலையாளத் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான நடிகர் பிரதீப் கோட்டையம், ஈ நாடு இன்னலே வரே என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர். தொடர்ந்து நடிகர் திலீப் நடித்த கல்யாணராமன், மம்முட்டியின் ராஜமாணிக்கம், பிருத்விராஜன் லாலிபாப் & நிவின் பாலியின் ஒரு வடக்கன் செல்ஃபி என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழிலும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த விண்ணை தாண்டி வருவாயா இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் ஆர்யா & நயன்தாரா இணைந்து நடித்த ராஜா ராணி உதயநிதி ஸ்டாலினின் நண்பேன்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் நடிகர் பிரதீப் கோட்டையம். 

மேலும் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்த தெறி திரைப்படத்திலும் போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் பிரதீப் கோட்டையம் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 70 திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் பிரதீப் கோட்டையம்  மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 61.

நடிகர் பிரதீப் கோட்டையம் அவர்களின் மறைவுக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் ரசிகர்களை மகிழ்வித்து வந்த நடிகர் பிரதீப் கோட்டையம் உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு மலையாள தமிழ் திரையுலக ரசிகர்களும் பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.