மலையாளத்தில் ஹீரோயினாக களமிறங்கும் தமன்னா! விவரம் உள்ளே
By Anand S | Galatta | September 01, 2022 21:28 PM IST
பல கோடி இந்திய சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோயின்களில் ஒருவராக திகழும் நடிகை தமன்னா நடித்த குர்துண்டா சீதாகலம் திரைப்படம் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில், ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் தமன்னா இணைந்து நடித்துள்ள பிளான் ஏ பிளான் பி திரைப்படம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாகவுள்ளது.
முன்னதாக முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் தமன்னா நடித்திருக்கும் பப்ளி பவுன்சர் திரைப்படம் வருகிற செப்டம்பர் 23ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸாகவுள்ளது. அடுத்ததாக வேதாளம் ரீமேக்காக மெகா ஸ்டார் சிரஞ்சீவி உடன் இணைந்து ஷங்கர் படத்தில் நடிக்கும் தமன்னா நடிப்பில் தொடர்ந்து போலே சுடியான் மற்றும் தட் இஸ் மஹாலக்ஷ்மி ஆகிய திரைப்படங்களும் வெளிவர உள்ளன.
கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என கலக்கி வரும் நடிகை தமன்னா தற்போது மலையாள திரை உலகிலும் களமிறங்குகிறார். இயக்குனர் அருண் கோபி இயக்கத்தில் பிரபல மலையாள நடிகர் திலீப் கதாநாயகனாக நடிக்கும் புதிய D147 திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் கதாநாயகியாக தமன்னா அறிமுகமாகிறார்.
அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த D147 படத்திற்கு ஷாஜி குமார் ஒளிப்பதிவில், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்ய சாம்.CS இசையமைக்கிறார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று செப்டம்பர் 1ஆம் தேதி கேரளாவில் கொட்டாரக்கரா கோவிலில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதர அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.