தமிழ் திரை உலகின் ஆகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக நல்ல கதை களங்களையும் சிறந்த கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாக வலம் வரும் நடிகர் சூர்யா நல்ல தயாரிப்பாளராகவும் சிறந்த திரைப்படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் சூர்யா தயாரித்து நடித்து கடந்த ஆண்டு(2021) இறுதியில் வெளிவந்த ஜெய் பீம் திரைப்படம் உலக அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்தது.

அடுத்ததாக நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் பாலா இயக்கத்தில் மீண்டும் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர் சூர்யா தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி.S.தாணு அவர்கள் தயாரிப்பில் உருவாகும் வாடிவாசல் படத்திலும் நடிக்கிறார்.மேலும் சூரரைப்போற்று வெற்றியைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்திலும், இயக்குனர் சிவா இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடிகர் சூர்யா அடுத்தடுத்து நடிக்கவிருக்கிறார். 

முன்னதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். கதாநாயகியாக பிரியங்கா அருள்முருகன் நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில், வினய், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, M.S.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், இளவரசு, தேவதர்ஷினி, ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

உலகெங்கும் வருகிற மார்ச் 10ஆம் தேதி நேரடியாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடுகிறது. எதற்கும் துணிந்தவன் படத்திற்கு, ரத்னவேலு ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பு செய்ய டி.இமான் இசை அமைத்துள்ளார்.  இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திலிருந்து பிரத்யேக புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்கள் இதோ…