2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று. நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜாக்கி ஆர்ட் டைரக்ஷன் செய்துள்ளார். 

ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இதில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். படத்தின் மாறா தீம் பாடல் மற்றும் வெய்யோன் சில்லி பாடல்கள் வெளியாகி சக்கை போடு போட்டது. படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. 

சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ மூலம் இணையம் வழியாக 2020 அக்டோபர் 30ம் தேதி வெளியாகிறது. இத்திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து தேவையுள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும் என்று சூர்யா ஏற்கெனவே குறிப்பிட்டு இருந்தார். 

இந்நிலையில் அந்த படத்தின் மூலம் கிடைத்த லாபத்தில் தற்போது 1.5 கோடி ரூபாயை திரைப்பட குழுவிற்கு அண்மையில் அளித்துள்ளார் சூர்யா. கலைப்புலி S தாணு அவர்களின் தலைமையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு ஆயுள்காப்பீடு செய்ய வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது . மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு காப்பீட்டு பிரீமியம் செலுத்த ஏற்பாடுகள் செய்துதருமாறு உத்தரவிட்டது. 

இந்நிலையில் OTT மூலமாக சூரரை போற்று திரைப்படம் வெளியாகும் நிலையில் சூர்யா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 30 லட்சம் நன்கொடையாக வழங்கினார். அந்த தொகையை தற்போது திரு கே ஆர் , திரு K. முரளிதரன், திரு KJR ராஜேஷ் ஆகியோர் தலைமையில் நீதிபதி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அறக்கட்டளையில் போதுமான நிதி இல்லாத இந்த சமயத்தில் சூர்யா தந்த இந்த பெருந்தொகையின் மூலம் 1300 உறுப்பினர்கள் காப்பீட்டு பிரீமியம்  மூலம் பயனடைவார்கள் . சூர்யா அவர்களுக்கு நன்றி என நீதிபதி தெரிவித்துள்ளார்.

சில தினங்களாகவே டாக் ஆஃப் தி டவுனில் சூர்யா தான் என்றே கூறலாம். நீட் தேர்வுக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டது பெரிதும் பேசப்பட்டது. அதன் பின் மண்ணுருண்ட மேல என்ற சூரரைப் போற்று பாடலில் சாதி தொடர்பான வரிகள் இருக்கிறது என கூறி புகார் அளிக்கப்பட்டது. இது அமைதியை குலைக்கும் வகையில் இருக்கிறது என கூறி வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது. எத்தனை தடைகள் வந்தாலும் சூர்யாவுக்கு நாங்கள் இருக்கிறோம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள். இந்த படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கவிருக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா.