ஈடு இணையற்ற நடிகராக இந்திய சினிமாவில் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ரசிகர்களை தனது ஸ்டைலால் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். 

இதனை தொடர்ந்து தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் திரைப்படத்திலும் முக்கியமான கௌரவ வேடத்தில் நடிக்கிறார். இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான பாபா திரைப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகிறது. மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் புது பொலிவுடன்  ரீ-மாஸ்டர் செய்யப்பட்டு டிசம்பர் மாதம் சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் 12ஆம் தேதி ரிலீசாக தயாராகி வருகிறது. 

ரஜினிகாந்த் அவர்கள் தயாரித்து, கதை, திரைக்கதை எழுதிய பாபா திரைப்படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்க, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். முழு படத்தையும் மீண்டும் படத்தொகுப்பு செய்து 3 மணி நேர திரைப்படத்தை இரண்டரை மணி நேர திரைப்படமாக மாற்றி ஃபிரேமுக்கு ஃபிரேம் காட்சிகளை மெருகேற்றி, சவுண்டிலும் 5.1DTSல் இருந்து டால்பிக்கு இணையான மாற்றங்களை செய்து தற்போதைய ரசிகர்கள் விரும்பும் படியாக பாபா திரைப்படம் ரீ-ரிலீஸாக உள்ளது. 

இதனிடையே நமது கலாட்டா பிளஸ் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் பாபா திரைப்படம் குறித்த பல சுவாரசிய தகவல்களை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா பகிர்ந்து கொண்டார். அப்போது பாபா திரைப்படத்தின் பன்ச் வசனங்கள் உருவான விதம் குறித்தும் பகிர்ந்து கொண்டார். “முன்னதாக பாபா திரைப்படத்திற்காக பிரத்யேக போட்டி ஒன்றை பிரபல வார இதழில் நடத்தினோம். அதில் பாபா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசும் பன்ச் வசனங்களை வாசகர்களை கடிதங்களின் வாயிலாக அனுப்ப சொல்லி, அதில் சிறந்ததை தேர்ந்தெடுத்து பரிசளித்தோம். அப்படி வந்ததுதான் "என் பேரு பாபா எந்த பக்கமும் சாயாத பாபா" மற்றும் "லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்" உள்ளிட்ட வசனங்கள்" என தெரிவித்துள்ளார். மேலும் பாபா திரைப்படம் குறித்தும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் குறித்தும் சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் பகிர்ந்து கொண்ட அந்த முழு பேட்டி இதோ…