இந்திய சினிமாவின் முடிசூடா மன்னனாக, என்றும் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்த் அவர்களுக்கு இந்திய  திரையுலகின் உயரிய விருதான மத்திய அரசின் தாதாசாஹேப் பால்கே விருது நாளை வழங்கப்படவுள்ளது. எனவே திரையுலகைச் சார்ந்த முன்னணி நட்சத்திரங்களும் ரசிகர் பொதுமக்களும் சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,  “நாளை எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது. ஒன்று, மக்களின் அன்பினாலும் ஆதரவினாலும் திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு எனக்கு வழங்கவுள்ளது” 

“இரண்டாவது, என்னுடைய மகள் சௌந்தர்யா விசாகன் அவருடைய சொந்த முயற்சியில் மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய “HOOTE” என்கிற APP-ஐ உருவாக்கி அதை அறிமுகப்படுத்த உள்ளார். அதில் மக்கள் தாங்கள் மற்றவர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்க விரும்பும் கருத்துக்களையும் விஷயங்களையும் இனி அவர்களது குரலிலேயே எந்த மொழியிலும் “HOOTE APP”  மூலமாக பதிவிடலாம்... இந்த வரவேற்கத்தக்க முயற்சியான“HOOTE  APP”-ஐ என் குரலில் பதிவிட்டு துவங்க உள்ளேன்” என தெரிவித்துள்ளார்

அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கியுள்ள அண்ணாத்த திரைப்படம் வருகிற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி வெளியீடாக திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.