இந்திய இசை உலகின் ஈடு இணையற்ற பொக்கிஷமாக தனது காந்தக் குரலால் என்றென்றும் மக்கள் மனதில் குடியிருக்கும் மறைந்த பின்னணி பாடகர் S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு இன்று (நவம்பர் 9ஆம் தேதி) இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. மேலும் சிறந்த பின்னணி பாடகி சின்னகுயில் சித்ரா அவர்களுக்கு இன்று பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி உட்பட இந்தியாவில் பல்வேறு மொழிகளில் 40,000-க்கும் அதிமான பாடல்களை பாடியுள்ள S.P.பாலசுப்ரமணியம் பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன், 6 தேசிய விருதுகள், 7 ஃபிலிம்பேர் விருதுகள், 25 நந்தி விருதுகள், 4 தமிழ் மாநில விருதுகள், 3 கர்நாடக மாநில விருதுகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளை சிறந்த பாடகராக வென்று குவித்துள்ளார்.

என்றென்றும் ரசிகர்களின் ஃபேவரட் பாடகராக திகழும் S.P.பாலசுப்ரமணியம் அவர்கள் கடந்த ஆண்டு (2020) செப்டம்பர் 25ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். இன்றும் S.P.பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவை ஏற்க ரசிகர்களின் மனம் மறுக்கிறது.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தில் டி.இமான் இசையில் ரஜினிகாந்தின் ஓபனிங் பாடலான அண்ணாத்த... அண்ணாத்த.. பாடல் S.P.பாலசுப்ரமணியம் அவர்களின் கடைசி பாடலாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று S.P.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு பத்ம விபூஷன் விருதை குடியரசுத் தலைவர் வழங்க எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் மகனான S.P.சரண் பெற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவரிடம் S.P.சரண் விருதுபெற்ற புகைப்படம் இதோ…