தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தற்போது இன்றியமையாத நடிகராக தனக்கே உரித்தான பாணியில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவர் S.J.சூர்யா . கடைசியாக நடிகர் சிலம்பரசன்.T.R கதாநாயகனாக நடித்து வெளிவந்த மாநாடு படத்தில் காவல்துறை அதிகாரியாக மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார் S.J.சூர்யா.

அந்தவகையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் ரிலீசாக உள்ள டான், இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து உயர்ந்த மனிதன் என S.J.சூர்யா நடித்துள்ள திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன. மேலும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கும் மார்க் ஆண்டனி படத்திலும் SJ.சூர்யா வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே முன்னதாக SJ.சூர்யா கதாநாயகனாக நடித்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது கடமையை செய் திரைப்படம். இப்படத்தில் பிக்பாஸ் போட்டியாளரும் நடிகையுமான யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் வெங்கட் ராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள கடமையை செய் படத்திற்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய அருண்ராஜ் இசையமைத்துள்ளார்.

கணேஷ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நஹர் பிலிம்ஸ் இணைந்து வழங்கும் கடமையை செய் திரைப்படம் வருகிற மே மாதம் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் கடமையை செய் படத்தின் ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.